சட்டம் ஒழுங்கு சீர்குலையும் எனில் உங்கள் ரசிகர்கள் யார்? இது எப்படி இருக்கு? ரஜினியை ஓட்டிய சீமான்
சென்னை: தூத்துக்குடிக்கு தாம் வந்தால் ரசிகர்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் எனில் உங்கள் ரசிகர்கள் யார்? என்று நடிகர் ரஜினிகாந்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தை உறைய வைத்தது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு. கடந்த 2018 மே 22-ல் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்.
அப்போது தூத்துக்குடிக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், சமூக விரோதிகளால்தான் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது என பேட்டியளித்தார். இது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
'போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டார்கள்' என்று சொல்ல தூத்துக்குடி சென்றபோது கெடாத சட்டம் ஒழுங்கு, விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்போது மட்டும் கெட்டுவிடுகிறதா?
— சீமான் (@SeemanOfficial) February 22, 2020
ரசிகர்கள் கூடி சட்டம் ஒழுங்கு சீர்குலையுமென்றால், உங்கள் ரசிகர்கள் யார்?
இது எப்டி இருக்கு?!
இந்த விசாரணை ஆணையத்தின் முன் வரும் 25-ந் தேதி ஆஜராக ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆணையம் முன்பாக ஆஜராக விலக்கு கோரி ரஜினிகாந்த் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தாம் தூத்துக்குடிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்றும் தாம் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க தயார் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
அவரது இந்த பதிலும் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டார்கள்' என்று சொல்ல தூத்துக்குடி சென்றபோது கெடாத சட்டம் ஒழுங்கு, விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்போது மட்டும் கெட்டுவிடுகிறதா?
ரசிகர்கள் கூடி சட்டம் ஒழுங்கு சீர்குலையுமென்றால், உங்கள் ரசிகர்கள் யார்? இது எப்டி இருக்கு?! என கூறியுள்ளார். ரஜினியை கிண்டலடிக்கும் வகையில் 16 வயதினேலே படத்தில் அவர் பயன்படுத்தும் வகையில் இடம்பெற்ற இது எப்படி இருக்கு என்ற வசனத்தை பயன்படுத்தி சீமான் கிண்டலடித்துள்ளார்.