உண்மையில் சீமான் வழிதான் தனி வழி.. விடாமல் தொடரும் சேவைகள்.. மக்கள் சபாஷ்!
விவசாயிகளுக்கு தென்னங் கன்றுகளை வழங்கினார் சீமான்.
சென்னை: என் வழி தனி வழி என்று சீமான் செய்து வரும் சில வேலைகளை மக்கள் சபாஷ் போட்டு வருகின்றனர்.
தேர்தல் வியூகம், கூட்டணி குழப்பம், என்று எல்லா கட்சிகளும் பரபரப்பாக இயங்கிவரும் வேளையில், நாம் தமிழர் கட்சி பட்டைய கிளப்பி வருகிறது, அதாவது நேரிடையாகவே மக்களை சந்தித்து வருகிறது.
கஜா புயலுக்கு பிறகு அரசுகள், தன்னார்வ அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் என ஆளாளுக்கு ஒவ்வொரு விதத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு உதவினார்கள், உதவியும் வருகிறார்கள். இதில் சீமானின் உதவிகள் புயல் பாதித்தது முதல் இப்போது வரை பேசப்பட்டு வருகின்றன.
சீமானின் உதவி
டெல்டா மக்கள் கஜாவால் பயிர்கள், நிலங்கள், தென்னை, வாழைகளை இழந்தபோதுதான் மனதளவில் உருக்குலைந்து விழுந்துவிட்டார்கள். இதனை சிலர் தாங்க முடியாமல் தற்கொலையிலும் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். இந்த சமயத்தில்தான் சீமானின் உதவி பெரிதும் உதவியது.
கவுன்சிலிங் பேச்சு
மனம் உடைந்து போயுள்ள தென்னை உள்ளிட்ட விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தனது தனது உரையை நிகழ்த்தி வந்தார். சீமானின் ஊக்கமளிக்கும் இந்த பேச்சிற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டது. பலருக்கு நம்பிக்கை பிறந்தது. கிட்டத்தட்ட இது கவுன்சிலிங் போலதான். இதனை பெரும்பாலும் வேறு யாரும் செய்யவில்லை. இந்த விதத்தில் சீமானின் பங்கு முக்கியமானதாக இருந்தது.
தென்னங்கன்றுகள்
அதேபோல மற்றொரு விஷயம், விவசாயிகளை மனதளவில் பக்குவப்படுத்திவிட்டு, அவர்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வினை கையில் எடுத்தார். 50 ஆயிரம் தென்னங்கன்றுகளை தருவதாக கட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இழந்தது கிடைத்தது
விவசாய மக்களோடு தோள் மீது கை போட்டு கொண்டு, பரஸ்பரம் உரையாடி சீமான் ஒவ்வொரு தென்னங்கன்றையும் தருகிறார். அதனை பெற்றுக் கொண்ட விவசாயிகளுக்கு என்னவோ போன வாழ்வு திரும்பவும் வந்ததுபோல ஒரு உணர்வு ஏற்படுகிறதாக சொல்கிறார்கள்.
|
விடாத சீமான்
நேற்றுகூட, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தெற்குகோட்டையில் பாதிக்கப்பட்ட வேளாண் பெருங்குடி மக்களுக்குத் தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பலர் ஓரளவுக்கு உதவிவிட்டு, மற்ற வேலைகளில் மூழ்கிவிட்ட நிலையில், இன்னமும்கூட டெல்டா மக்கள் மீண்டு வர சீமான் எடுத்து வரும் பங்கு முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.