முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கு.. ரத்து செய்ய கோரி சீமான் மனு.. ஹைகோர்ட் நிராகரிப்பு
சென்னை: தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேசியதாக செய்தி வெளியானது. (( மத்திய பாஜக அரசின் மேஸ்திரி போல தமிழக முதல்வர் செயல்படுவதாக பேசியிருந்தார்.))
அந்த கருத்தும், செய்தியும் தமிழக அரசுக்கும், முதல்வரின் பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் இருப்பதாக சீமான் மீதும், தொலைக்காட்சி மீதும், அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மற்றும் தண்டிக்க வேண்டும் என கோரி தமிழக முதல்வர் சார்பாக சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் தான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரியும் வழக்கில் நேரில் ஆஜராக விளக்கு அளிக்க கோரியும் சீமான் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து செய்யபட்டது.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையனின் முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கு விசாரணைக்கு சீமான் நேரில் ஆஜராகவும், விசாரிக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி மனு குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணை மார்ச் 23 ஆம் தேதி தள்ளிவைத்தார்.