நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பலாத்கார சம்பவங்களுக்கு என்கவுண்ட்டர் போன்ற மரண தண்டனைதான்: சீமான்
சென்னை: நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தாலும் பலாத்கார சம்பவங்களுக்கு தெலுங்கானா என்கவுண்ட்டர் போன்ற மரணதண்டனைதான் விதிக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு இன்று சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது:
தெலுங்கானா என்கவுண்ட்டரை நான் வரவேற்கிறேன். மரணம் என்பது எந்த ஒரு குற்றத்துக்கும் தண்டனையாக இருக்கக் கூடாது என்று போராடுகிற பிள்ளைகள் நாங்கள்.
அதிகாலை சென்றது ஏன்? விலங்கு போட்டீர்களா? என்கவுண்டர் பற்றி நிருபர்கள் சரமாரி கேள்வி.. கமிஷனர் பதில்
வன்புணர்வுக்கு தண்டனை
ஆனால் பெண்களை போகப் பொருளாக, போதைப் பொருளாக, நுகர் பொருளாக கருதி வன்புணர்வு செய்யும் செயலுக்கு மரணத்தைத் தவிர வேறு எதுவும் தண்டனையாக இருக்காது. பொள்ளாச்சி சம்பவத்தில் அவ்வளவு பெரிய குற்றம் செய்தவர்கள் மீதான குண்டர் சட்டம் 90 நாட்களில் ரத்து செய்யப்பட்டது கொடுமையானது. அது வரலாற்று பெரும் பிழை.
என்கவுண்ட்டரே தீர்வு
எந்த இடத்தில் பாலியல் வன்புணர்வு செய்தார்களோ அதே இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் 4 பேரை சுட்டால்தான் மக்களிடம் அச்சம் பரவும். மரணம் ஒன்றுதான் இவர்களை ஒழுங்காக நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தி கொண்டே இருக்கும்.
தெலுங்கானா என்கவுண்ட்டருக்கு வரவேற்பு
இல்லை எனில் 90 நாளில் வெளியே வந்துவிடலாம்... எந்த குற்றமும் செய்யலாம்..என்கிற சிந்தனை வந்துவிடும். தெலுங்கானாவில் நடந்த செயலை நாங்கள் முழு மனதார வரவேற்கிறோம்.
நாங்க ஆட்சிக்கு வந்தாலும்..
நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதே தண்டனைதான். 6 வயது குழந்தையை ஒருவன் வன்புனர்வு செய்கிறான் எனில் அவனை தண்டிக்க வேண்டும். அவனை சிறையில் அடைத்து வைக்கக் கூடாது. தெலுங்கானாவில் நடந்ததை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நிர்மலா சீதாராமனுக்குப் பதில்
வெங்காயம், வெள்ளைப்பூண்டை சாப்பிடுவது இல்லை என்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். மாட்டுக்கறி கூட நீங்கள் சாப்பிடுவது இல்லை.. அப்படியானால் நாங்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதும் உங்களை பாதிக்காதுதானே..ஒரு பொறுப்புள்ள அமைச்சர் சொல்லும் பதிலா இது? இவ்வாறு சீமான் கூறினார்.