என் மொழி தமிழ்... நான் இந்திய நாட்டின் குடிமகன் புதிய கல்விக்கொள்கையைத் திரும்பப் பெறு - சீமான்
செத்துப்போன அவர்கள் தாய்மொழியான சமஸ்கிருதத்தை உயிர்பிக்க துடிக்கிறார்கள்.
சென்னை: இந்தி படி என்று சொல்வது இந்தி தீவிரவாதம்.. செத்துப்போன அவர்கள் தாய்மொழியான சமஸ்கிருதத்தை உயிர்பிக்க துடிக்கிறார்கள். நாங்கள் செத்துக்கொண்டிருக்கும் தமிழ் மொழியை பாதுகாக்க நினைப்பது தவறா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக ஞாயிறன்று காலை 11 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட கண்டனப் பதாகை ஏந்தும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையேற்று, அவரது இல்லத்தின் முன்பு நாம் தமிழர் கட்சியினர் மற்றும் மாணவர்களுடன் இணைந்து கண்டனப் பதாகை ஏந்தி முழக்கங்கள் எழுப்பி தொடங்கிவைத்தார்.
புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகை ஏந்தி போராடிய சீமான் செய்தியாளர்களிடம் பேசும் போது, மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் பொருளாதாரத்தை நிறைக்கிற மாநிலம் தமிழ்நாடு. இந்தி படித்தவர்கள் வேலை தேடி லட்சக்கணக்கானவர்கள் தமிழ்நாட்டிற்குத்தான் வந்திருக்கிறார்கள் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
என் மொழி தமிழ், நான் இந்திய நாட்டின் குடிமகன் என்றும் கூறிய சீமான், இந்தி படிக்காவிட்டால் தேச துரோகி என்று முத்திரை குத்துவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். வரலாற்றை மறந்த இனம் என்றைக்கும் வாழாது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய இ பாஸ் நடைமுறை.. விண்ணப்பித்த உடன் கிடைக்கும்!
சமஸ்கிருதம் படிக்கவேண்டும் என்று சொல்கின்றனர். தமிழ் ஏன் படிக்கக்கூடாது. சமஸ்கிருதம் எந்த மாநிலத்தின் மொழி, அது படிப்பதால் என்ன பலன் என்று கேட்டார் சீமான்.
இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் நடத்திய போராட்டம் பற்றி தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மாநில உரிமையான கல்வியை மொத்தமாக மத்தியப் பட்டியலுக்கு கொண்டுசெல்லும் முன்நகர்வாகவும், கல்வியை ஆரியமயப்படுத்தி நவீன குலக்கல்வித் திட்டங்களைப் புகுத்தவும், இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டுவந்து தேசிய இனங்களின் மொழி சிறப்பு, வரலாற்றுப் பெருமைகளை இருட்டடிக்கவும், அதன் தனித்துவமிக்க கூறுகளையும், பண்பாட்டு விழுமியங்களையும் மறைத்து ஒற்றைமயமாக்குவதற்கும், மும்மொழி கொள்கை மூலம் எதற்கும் பயன்தரா சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளைத் திணிப்பதற்காகவும் கொரோனா ஊரடங்கு காலத்தில் அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தியும் தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, மாநிலங்களின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் இப்புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக கொள்கை முடிவெடுக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.
இதனையொட்டி தமிழகமெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்கள், மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து புதிய கல்விக்கொள்கையைத் திரும்பப்பெற வலியுறுத்தும் முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் #TNRejectsNEP என்ற குறிச்சொல்லுடன் இணைத்து அதிகமாக பகிர்ந்தனர். இதனால் ட்விட்டரில் இந்த ஹேஸ்டேக் இன்று மாலை வரை அதிகம் பகிரப்படுபவைகளில் முன்னணியில் இருந்தது.
இது பொதுமக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய வரவேற்பையும் 'புதிய கல்விக்கொள்கை' குறித்தான விழிப்புணர்வையும் பரவலாக ஏற்படுத்தியுள்ளது.