பிரபாகரன் பிள்ளை Vs கருணாநிதி மகன் இடையே யுத்தம்.. ஸ்டாலினை எதிர்த்துதான் போட்டி- சீமான் திட்டவட்டம்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திரு உருவப் படத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் இன்று மலர்வணக்கம் செலுத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது:
நடிகர்களை எதிர்ப்பதுதான் நாம் தமிழர் கட்சியின் கொள்கை என மட்டும் நினைத்து கொண்டிருக்காதீர்கள். சட்டசபை தேர்தலில் நான் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டு என்பதை மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்வார். அவர் எந்த் தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்த தொகுதியில்தான் போட்டியிடுவேன்.
பிரபாகரன் பிள்ளை Vs கருணாநிதி மகன்
திமுகவுக்கு மாற்று அதிமுக இல்லை. திமுகவுக்கு மாற்று நாம் தமிழர் கட்சி. திமுகவா? நாம் தமிழரா? திராவிடரா? தமிழரா? இந்த சண்டையை இந்த தேர்தலில் முன்னிறுத்துவோம். இதில் மற்றவர்கள் பயப்படலாம். நான் பிரபாகரனின் பிள்ளை. பயப்படமாட்டேன். நான் பிரபாகரனின் பிள்ளை. அவர் கருணாநிதியின் மகன். இருவரும் ஒரே களத்தில் யுத்தம் செய்வோம்.
ஸ்டாலினை எதிர்த்து போட்டி
அதிமுக எதிர்க்க வேண்டிய கட்சியே இல்லை. அதை ஏன் எதிர்க்க வேண்டும்? வில்லன் இல்லா ஹீரோவுக்கு என்ன வேலை? அதிமுகவை பெத்து போட்டது யாரு? திமுகதான் திராவிடன் என்கிற கோட்பாடு பேசுகிறது. அதை அழிக்க முடியாது என்கிறது. சரி வாங்க ஒருமுறை சண்டை போட்டு பார்ப்போம். ஸ்டாலின் எங்க போட்டியிடுவாரோ அங்க போட்டியிடுவேன்.
நான் இந்து அல்ல
இந்துத்துவாவை திராவிட கட்சிகள் எதிர்க்கிறது என்று யார் சொல்வது? 90% இந்துக்கள் எங்கள் கட்சியில் இருப்பதாக சொன்ன தலைவர் யார்? நாங்கள் எங்களை இந்துக்களாக சொல்லவே இல்லை. நாங்கள் சைவர்கள். எங்கள் மதம் சிவ சமயம். நாங்கள் சிவன், முருகன், மாயோன், கொற்றவையை வழிபடுகிறவர்கள். வெள்ளைக்காரன் போட்ட சட்டம்தான் இந்து என்கிறது. நானா இந்து?
நான் வீர சைவன்
நான் முருகனை வழிபடுகிற சைவன். அதிலும் வீரசைவன். சமயம் எங்களது சைவம்தான். சாப்பாட்டில் நாங்கள் எப்போதும் அசைவம். அதனால் நாங்கள் வீர சைவர்கள். கிறிஸ்தவ கூலி என விமர்சிக்கும் பாஜக. ஆர்.எஸ்.எஸ்.தான்.. அவன் உருவாக்கிய நாடு, மதத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.-ம்தான். லிங்காயத்துகளைப் போல நாங்களும் அதிகாரத்துக்கு வந்தால் தனிமதமாகிவிடுவோம்.
ஜனாதிபதிக்கே இந்த நிலை
தமிழக பாஜக தலைவர் எல். முருகன் இந்துதானே.. அவரது வீட்டில் போய் பாஜகவின் மூத்த தலைவர்களை சாப்பிட சொல்லுங்க.. வேலை தூக்கிக் கொண்டு போன எல். முருகனை கோவிலுக்குள் அழைத்து சென்றீர்களா? இந்திய ஜனாதிபதியையே கோவிலுக்குள் விடமாட்டேன் என்கிறீர்கள். நாட்டின் முதல் குடிமகனே ஓரத்தில் உட்கார்ந்து யாகம் செய்து கொண்டிருக்கிறார். இந்த கேவலத்தை துடைக்க முடியாமல் இந்து இந்து என பேசுகின்றனர்.
அதானி, அம்பானிக்காக
டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் இதுவரை 6 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது மத்திய அரசு. ஏன் ஒரே கட்டமாக சட்டத்தை திரும்பப் பெற்றுவிடலாமே. அதானியும் அம்பானியுடன் லட்சக்கணக்கான டன் உணவுப் பொருட்களை பதுக்கி வைக்க தாரை வார்த்து கொடுக்க குடோன்களை உருவாக்கிவிட்டு சட்டங்களை கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. இவ்வாறு சீமான் கூறினார்.