இதான் சீமான்.. "பன்றிதான் கூட்டமாக வரும்.. ஆனால் சிங்கம்".. சொன்னதை செய்து.. லிஸ்ட் அறிவித்து.. செம!
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது
சென்னை: சொன்னதை சரியாக செய்து விட்டார் சீமான்.. திமுக அதிமுகவுக்கு முன்பே வேட்பாளர் லிஸ்ட்டை அறிவித்ததுடன், அதில் பெண்களுக்கான வாய்ப்பையும் வழக்கம்போல தர முடிவு செய்துள்ளார்.. அத்துடன் சிங்கம் தனியாகத்தான் வேட்டையாடும் என்ற பேச்சையும் நிரூபித்துள்ளார்.
கடந்த 2019 எம்பி தேர்தலின்போதே, 8 சதவிகிதம் வாக்குகளை பெற்று தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் எண்ணமாக இருந்தது. ஆனால்,.. அவர்களால் வெறும் 4 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
ஏனென்றால் கமல் தனியாக கட்சி ஆரம்பித்து அப்போதுதான் முதல் தேர்தலையும் சந்தித்தார்.. அவரும் 4 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தார்.. அதனால்தான், நாம் தமிழருக்கு வந்திருக்க வேண்டிய ஓட்டுக்கள் கமலுக்கு சென்றது..
மநீம
இந்த முறை கமலுடன் கூட்டணி வைப்பது போல ஒரு பேச்சு எழுந்தது.. அப்படி கூட்டணி வைத்தால், அதிமுக, திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களுடன், இவர்கள் 2 பேரின் வாக்குகளும் சேர்ந்து ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கும் என்றும் நம்பப்பட்டது.. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.. சிங்கம் தனியாகத்தான் வேட்டையாடும், நாய், ஓநாய், பன்றிதான் கூட்டமாக வேட்டையாடும் என்று சொல்லி இருந்தார் சீமான். சொன்னது போலவே இப்போது தனித்து களமிறங்க போகிறார்.
தனித்து போட்டி
"நான் வீழ்ந்தாலும் தமிழ் வாழவேண்டும் என்று நினைத்தவர்கள் தற்போது தமிழ் விழுந்தாலும் நான் வாழவேண்டும் என நினைக்கிறார்கள்... அதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் எப்பொழுதும் போல தனித்து தான் நான் போட்டியிட உள்ளேன் என்று சொன்னதையே மீண்டும் நிரூபித்துவிட்டார் சீமான். "ஒவ்வொரு முறையும் தனித்து போட்டியிடுகிறோம்.. தொடர்ச்சியாக தோல்வி அடைந்தால், தொண்டர்கள் ஒருவித சலிப்பை சந்திப்பார்கள்.. அதனால் இந்த முறை யாருடனாவது கூட்டணி அமைத்தால்தான் கட்சிக்கு நல்லது" என்று சீமானுக்கு எத்தனையோ பேர் கட்சியில் ஆலோசனை சொல்லியும் எடுபடவில்லை.. கெத்தாக நின்று தனித்தே களமிறங்கிவிட்டார்.
லிஸ்ட்
அதேபோல, பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் தருவது என்பது நாம் தமிழர் கட்சியின் சிறந்த கொள்கை ஆகும்.. இதை கமலும் செய்கிறார் என்றாலும், சீமான் முன்னோடி ஆவார்.. கடந்த எம்பி தேர்தலின்போது 40 தொகுதிகளிலும் இதுபோலவே தனித்து போட்டியிட்டு, 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும், 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும் நிறுத்தினார்.. திமுக, அதிமுக என பாரம்பரிய மிக்க கட்சிகள் இருந்தாலும், யாருமே செய்யாத சாதனையாக ஆண்-பெண் வேட்பாளர்களுக்கு சரிசமமாக வாய்ப்பு தந்தார் சீமான்.
திமுக
இது பல தரப்பினரால் கவனிக்கப்பட்டது... வழக்கமாக, ஒவ்வொரு முறையும் தனித்து போட்டியிட்டு, மலைபோன்ற கட்சிகளுடன் மோதி வரும் சீமானின் தைரியம் பேசப்பட்டு வருகிறது.. இதில், ஆண் வேட்பாளர்களுக்கு நிகராக பெண் வேட்பாளர்களையும் சீமான் நிறுத்தி வருவது அவரது மற்றுமொரு துணிச்சலை வெளிப்படுத்தி வருகிறது.. அத்துடன், எம்பி தேர்தலின்போது, ஆண் வேட்பாளர்களைவிடவும் பெண் வேட்பாளர்கள் தான் பெரிதும் பேசப்பட்டனர்.. மக்களையும் வெகு எளிதாக கவர்ந்தனர்.. அந்த வகையில் இந்த முறையும் பெண் வேட்பாளர்கள் களமிறக்க முடிவு செய்துள்ளார்.
கூட்டணி
35 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு விட்டார்.. தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்... புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்... இதை மெகா கட்சிகளான திமுக, அதிமுககூட இன்னும் செய்யவில்லை.. இன்னும் கூட்டணியே முடிவாகவில்லை.. எல்லாரும் பேச்சுவார்த்தையிலேயே இருக்கிறார்கள்.
தேர்தல்
ஆனால், அனைவருக்கும் முந்தி கொண்டு, சீமான் முதல்கட்ட வேட்பாளர் லிஸ்ட்டை வெளியிட்டு விட்டது, தமிழக கட்சிகளுக்கே கொஞ்சம் ஷாக்தான்.. அதேபோல, இந்த முறை கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்க போவதாக சொல்லிவிட்டார்.. அதையும் சொன்னதுபோலவே சீமான் செய்வார் என்று நம்பப்படுகிறது..