காங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி
Recommended Video
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது, நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல அனுதாபத்தை பெற்றுத்தந்துள்ளதாம்.
கடந்த 13-ம் தேதி இரவு விக்ரவாண்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான், ராஜீவ்காந்தியை நாங்க தான் கொன்றோம் எனப் பேசியிருந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் சீமான் தெரிந்து பேசினாரோ தெரியாமல் பேசினாரோ, ஆனால் அந்தப் பேச்சு நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனின் வெற்றிக்கு கைகொடுக்கும் எனக் கூறப்படுகிறது.
இதனால் அதிமுக முகாம் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளதாம். சீமானின் பேச்சுக்கு பிறகு காங்கிரஸ் நிர்வாகிகள் அதை வைத்தும், சீமானை கண்டித்தும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். பொதுவாகவே நாங்குநேரி காங்கிரஸ் கட்சிக்கு சாதகமானது எனக் கூறப்படுவதுண்டு. அதிலும்,ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதை மீண்டும் அவர்களுக்கு நினைவுப்படுத்தினால் கேட்கவா வேண்டும், நாளுக்கு நாள் காங்கிரஸ் முகாமிற்கு ஆதரவு அதிகரிக்கிறதாம்.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நாங்குநேரியில் முகாமிட்டு இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிமுக அமைச்சர்களுகு சீமான் மீது கடும் கோபமாம். வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானையை போட்டு உடைத்த கதையாக, அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்ககோரி மக்களிடம் பிரச்சாரம் செய்து அவர்களை தயார் படுத்தி வைத்திருந்தால், கடைசியில் சீமான் இப்படி பேசி காங்கிரசுக்கு அனுதாபத்தை தேடிக்கொடுத்து விட்டாரே என்று புலம்புகிறார்களாம்.
இதனிடையே சீமான் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், தனது பேச்சை திரும்பப்பெற போவதில்லை என்பதில் அவர் உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.