கனிமொழி, உதயநிதி, கே.எஸ்.அழகிரியின் சாத்தான்குளம் பயணமும் இ பாஸூம்.. விளக்கம் கேட்கும் சீமான்
சென்னை: லாக்டவுன் காலத்தில் இ பாஸ் பெற்று பயணிக்க வேண்டும் என்கிற விதி சாமானியர்களுக்கு மட்டும்தானா? எதிர்க்கட்சியினருக்கு இல்லையா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் முன் வைக்கும் 8 ஆலோசனைகள்... உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தல்
300 கி.மீட்டர் பயணம் எப்படி?
மாவட்ட எல்லையைக் கடப்பதற்கே அனுமதிச்சீட்டுத் தேவைப்படும் நிலையில் தொண்டர்கள் புடைசூழ 300 கிலோ மீட்டர் தாண்டிச் செல்வதற்கு எவ்வாறு அனுமதி கிடைத்தது? அத்தியாவசியப்பொருட்கள் வாங்க 2 கிலோ மீட்டர்வரை வாகனங்களைப் பயன்படுத்தாது நடந்துசெல்ல வேண்டும் எனக் கெடுபிடி நிலவும் மாநிலத்தில் சென்னையிலிருந்து சாத்தான்குளம் வரை எப்படிப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது?
உதயநிதியும் இ பாஸ் விவகாரமும்
தம்பி உதயநிதி அனுமதிச்சீட்டுப் பெறாமல்தான் பயணித்தார் எனக் குற்றஞ்சாட்டியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். சென்னையிலிருந்து சாத்தான்குளம் வரையிலான தொலைதூரத்தில் ஒரு இடத்தில்கூடக் காவல்துறை அதிகாரிகள் அவரது வாகனத்தை நிறுத்தி அதுகுறித்து விசாரிக்கவில்லையா? சோதனை செய்யவில்லையா?
தனிமைப்படுத்தவில்லை ஏன்?
மதுரையில் விடுதியில் தங்கியிருந்து சென்றார் என்கிறார்கள் அங்கும் யாரும் பரிசோதிக்கவில்லையா? அனுமதிச்சீட்டு இல்லாத ஒருவரை எவ்வாறு சாத்தான்குளத்திற்குப் பயணம் செய்யவிட்டார்கள்? சென்னையிலிருந்து வெளியூருக்குச் செல்பவர்களைக் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களை தனிப்படுத்தும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. அந்த நடைமுறை ஏன் கனிமொழி, உதயநிதி, அழகிரி பயணிக்கும் பொழுது கடைபிடிக்கவில்லை?.
விதிகளை எப்படி மீறலாம்?
சென்னையில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரித்துவரும் வேளையில் மீண்டும் சென்னை திரும்பிய இவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்களா? குறைந்தபட்சம் 14 நாட்கள் தனித்திருக்க அறிவுறுத்தப்பட்டார்களா? ஊரடங்கு, சமூக இடைவெளி, தனித்திருத்தல் என அனைத்து விதிகளையும் மீற இவர்களை அனுமதித்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது?
இவர்கள் மீது வழக்கு பாயுமா?
நாளை இவர்களால் மற்றவர்களுக்கோ மற்றவர்களால் இவர்களுக்கோ கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? தமிழகம் முழுக்கப் பொது முடக்க விதிகளை மீறியதற்காகப் பல இலட்சம் வழக்குகள் அடித்தட்டு உழைக்கும் எவ்விதப் பின்புலமும் இல்லாத எளிய மக்கள் மேல் பதியப்பட்டிருக்கிறது அப்படியான வழக்குகள் இவர்கள் மேல் பாயாதது ஏன் என்ற கேள்விக்கு என்ன விடையுண்டு?
தமிழக அரசு விளக்கம் தர வேண்டும்
சாத்தான்குளம் படுகொலையைக் கேள்வியுற்றவுடனே, அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல்கூறி களத்தில் நிற்க வேண்டும் எனப் பெருவிருப்பமும், பேரார்வமும் கொண்டேன். ஊரடங்கு விதிகளைக் கடைபிடிக்க வேண்டுமென்பதால், அப்பயணத்தைத் தவிர்த்து வந்தேன். ஆனால், எதிர்க்கட்சியினர் நாடறிய அவ்விதிகளை முழுவதுமாகப் புறந்தள்ளிப் பயணித்துள்ளதும், அதற்கு தமிழக அரசு அனுமதித்துள்ளதும் அதிர்ச்சியளிக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.