கியரை மாற்றிய சசிகலா.. சீமான், சரத்குமார், பாரதிராஜா.. வரிசையாக வீட்டுக்கே போய் சந்தித்த பிரபலங்கள்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளான இன்று சசிகலா தனது அதிரடியை ஆரம்பித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அவரது இல்லத்தில் வரிசையாக அரசியல் பிரமுகர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி விட்டு சென்றுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவர் மனைவி ராதிகா ஆகியோர் இன்று சசிகலா வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.
வரிசையான சந்திப்பு
சில நிமிடங்கள் இவர்கள் ஒன்றாக அமர்ந்து ஆலோசனை நடத்தினர். இதேபோல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா சசிகலாவை சந்தித்தார். விவசாயிகள் சங்க தலைவரான பி.ஆர்.பாண்டியனும் சசிகலாவை சந்தித்து பேசினார். இவை அனைத்துமே நலம் விசாரிப்புகள் என்று கூறப்பட்டாலும், ஜெயலலிதா பிறந்த நாளில் சொல்லலி வைத்து மாதிரி நடந்துள்ளது.
பாரதிராஜா பேட்டி
பாரதிராஜா பின்னர் கூறுகையில்,ஒரு தமிழச்சியை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் எனவே வந்து பார்த்தேன். அரசியலில் இருந்த வெற்றிடம் அனைத்தையும் நிரப்ப தான் சசிகலா வந்துவிட்டார், என்று தெரிவித்தார்.
சரத்குமார், ராதிகா
சரத்குமார் கூறுகையில், நன்றி மறப்பது நன்றன்று என்ற அடிப்படையில் சசிகலாவை சந்தித்தேன். சசிகலா உடல்நிலை குறித்து விசாரித்தேன் என்றும் தெரிவித்தார். ராதிகா சரத்குமார் அளித்த பேட்டியில் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவின் உடல்நிலை குறித்து விசாரிக்கவே அவரை சந்தித்தோம் என்று தெரிவித்தார்.
சீமான் சந்திப்பு
அடுத்ததாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சசிகலாவின் கணவர் நடராஜனுடன் சீமானுக்கு முந்தைய காலத்தில் நல்ல நட்புறவு உண்டு. தமிழ் தேசியம் போன்ற கொள்கைகளை முன்னிறுத்தியவர் நடராஜன். திமுக எதிர்ப்பு தமிழகத்தில் பரவலாக நடராஜன் முக்கிய காரணமாக இருந்தவர். இதனிடையே, இந்த சந்திப்புகள் அனைத்தும் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுததியுள்ளன.
சசிகலா தலைமையிலான அமமுக 3வது அணியை ஏற்படுத்தி, அதில், நாம் தமிழர், சரத்குமாரின் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளை இணைத்து களமிறங்க திட்டம் தீட்டப்படுகிறதா என்ற சந்தேகங்களை இந்த சந்திப்புகள் ஏற்படுத்துகின்றன. அதிமுக கூட்டணி, திமுக கூட்டணியில் அதிக சீட் கிடைக்காமல் அதிருப்தியடையும் கட்சிகளுக்கு அமமுக கூட்டணி ரத்தின கம்பளம் விரிக்கக் கூடும். எனவேதான் 10 வருடமாக அதிமுக கூட்டணியில் உள்ள சரத்குமார் சசிகலாவை சந்தித்துள்ளார். தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் சசிகலாவை புகழ்ந்துரைத்திருந்தார்.
அரசியல் திட்டம்
"நாங்கள் சில கட்சிகளுடன் பேசி வருகிறோம் முடிவுக்கு வந்த பிறகு அறிவிக்கப்படும்" என்று இன்னொரு பக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளதையும், இந்த சந்திப்புகளையும் பொருத்திப் பார்த்தால் திட்டம் தெளிவாக தெரியும். சசிகலாவை அதிமுகவில் இணைக்காவிட்டால், அடுத்து 3வது அணிதான் என்பது உறுதியாக தெரிகிறது.