குடியுரிமை மறுக்கப்பட்டால்.. ஒரு கவலையும் இல்லை ராஜா.. கைலாசா நாட்டுக்கு போய்டுவேன்.. சீமான் கிண்டல்
கைலாசா நாட்டுக்கு சென்று விடுவேன் என சீமான் தெரிவித்துள்ளார்
சென்னை: "எனக்கு குடியுரிமை மறுக்கப்பட்டால், ஒரு கவலையும் இல்லை ராஜா.. நேரா கைலாசா நாட்டுக்கு போய்டுவேன்.. அதிபர் நித்யானந்தாவும் அவரது கைலாசா நாடும் இருக்கவே இருக்கு" என்று சீமான் கிண்டலாக பேசினார்.
இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்களும் எதிர்க்கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தமிழகத்திலும் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன.. அந்த வகையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சியும் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. வள்ளுவர் கோட்டத்தில் நடந்த இந்த போராட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:
"நமக்கு ஒரு அரசாங்கம் அமைந்திருக்கு பாருங்க.. உலகத்துல எந்த இனத்துக்கும் இப்படி ஒரு அரசாங்கம் அமையாது.. வரலாற்றில் பெரும் பிழையை தொடர்ச்சியாக செய்து வருகிறது அதிமுக அரசு.. இதை ஏன் எதிர்க்கல.. எதிர்த்து வாக்கு செலுத்தியிருந்தால், இந்த மசோதாவே அங்கே நிறைவேறியிருக்காது.. இதை தடுத்திருக்கலாமே அதிமுக கட்சி" என்று சரமாரியாக பேசினார்.
ஐயா ராமதாஸா இப்படி பேசினார்? அதிர்ச்சியாக உள்ளது.. "சிறுபான்மை" என்று சொல்லாதீங்க.. சீமான் பேட்டி
தொடர்ந்து மத்திய, மாநில அரசை சாடி பேசும்போது, "எனக்கு குடியுரிமை இல்லைன்னு சொல்றீங்களா.. பாஸ்போர்ட்டை குடுத்துடுங்க.. ஒரு பிரச்சனையும் இல்லை ராஜா.. கைலாசான்னு ஒரு நாடு உருவாயிடுச்சு.. எங்களுக்கு அதிபர் நித்யானந்தாவும், அவரது கைலாசா நாடும் இருக்கு" என்று கிண்டலாக சொன்னதும் கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.