"அன்னிக்கே சாமி சொன்னாரே.. ராமனோட நாட்டில் ஏன் விலை அதிகம்".. சீமான் பொளேர் தாக்கு!
பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து சீமான் பேட்டி தந்துள்ளார்
சென்னை: "அன்னைக்கு சுப்பிரமணியசாமி சொன்னார் இல்லை, ராவணன் நாடு, சீதா நாடுகளில் எல்லாம் பெட்ரோல் விலை குறைவா இருக்கு... அந்த மாதிரிதான்.. ராமன் நாட்டில் விலை ரொம்ப கூடுதலாக இருக்க.. எல்லாம் தனியார் மயம், அதனால், நினைச்ச நேரத்தில் விலை ஏத்தறாங்க.." என்று சீமான் தெரிவித்தள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முடிக்கரை கிராமத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் நாம் தமிழர் கட்சி் ஒருங்கிணைப்பாளர் சீமான் மகன் பிரபாகரனுக்கு காதணி விழா நடைபெற்றது..
இந்த விழாவில், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்ற கட்சியினர், தொண்டர்களுக்கு சீமான், 108 ஆடுகள் வெட்டி கறிவிருந்து அளித்தார். இதை பற்றிசீமான் சொல்லும்போது, இது எங்கள் பரம்பரை பழக்கம் தான் என்றார்.
கிடாய் வெட்டி
விழா முடிவில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது சசிகலா வருகை, பிரதமர் வருகை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, உள்ளிட்ட அனைத்து தமிழக நிலவரம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.. அப்போது சீமான் அளித்த பதில்கள்தான் இவை: "என்னுடைய மகன் காதணி விழாவிற்காகவும், குலதெய்வ வழிபாட்டிற்காகவும் இங்கு வந்தோம். 108 கிடாய் வெட்டி விருந்து வைத்து விழா நடத்தி ரொம்ப சந்தோஷத்தில் நிற்கிறேன்.
தள்ளுபடி
இன்று நம் விவசாயிகள் கடனாளி ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்... ஏன்னா, நெல் வாங்கி விற்பவனும், தவிடாக்கியவனும் கூட இன்னைக்க பணக்காரர்களாக ஆகி இருக்காங்க.. ஆனால் அதை விளைவித்தவன் கடனாளி ஆக காரணம் என்ன? ஒவ்வொரு முறையும் விவசாய கடனை தள்ளுபடி செய்தாலும் விவசாயி கடனாளியாகவே இருக்கிறான் என்றால், என்ன காரணம்? அடிப்படையில் பிரச்சினை இருக்கிறது... உழவன் உற்பத்தி செய்த பொருளுக்கு அவர்களே விலை நிர்ணயிக்க முடியாத நிலையை மாற்றவேண்டும்.
அறிவிப்பு
பிரதமர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தது வெறும் வெற்று அறிவிப்பு தான்...மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணியை தொடங்கினார்களே? அது வந்துச்சா?ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் என்ன செய்தாங்க? ஒரு வெற்று அறிவிப்பு, பசப்பு வார்த்தைகள் தானே எல்லாம்? நிதி இருக்கிறது என்றால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியை ஏன் நிறுத்தணும்? மத்திய அரசு செய்வதெல்லாம் ஒரு ஏமாற்று வேலை...
ராவணன் நாடு
வெற்றி நடை போடுகிறதா தமிழகம்? நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால்தான் தமிழ்நாடு வெற்றி நடைபோடும்... பெட்ரோல், டீசல் விலை பற்றி, சுப்பிரமணியசாமி அன்னைக்கு சொன்னதுபோல ராவணன் நாடு, சீதா நாடுகளில் எல்லாம் விலை குறைவா இருக்கு... ராமன் நாட்டில் விலை ரொம்ப கூடுதலாக இருக்கு.. எல்லாம் தனியார்மயம் ஆக்கியதால் தான், அவர்களுக்கு நினைச்ச நேரத்தில் விலையேற்றுவது வாடிக்கையாகி விட்டது. கச்சா விலை குறைந்தாலும் பெட்ரோல்-டீசல் விலை உயர்கிறது.. இதை தான் மாற்ற வேண்டும்.
தொல்லியல் ஆய்வு
முடிக்கரையில் தொல்லியல் ஆய்வு நடக்க போகிறது.. பல்லாயிரம் வருஷத்துக்கு முன்பு பூமியில் புதைந்த மரம், செடி கொடிகள் மக்கி கரியானதும் இடைவெளியில் புகுந்த காற்று மீத்தேனாகவும் பூமிக்குள் மறைந்துள்ளது... அதுபோலதான் கீழடியும்... அதன் தொல்லியல் ஆய்வுகளை வரவேற்கிறேன்.. சசிகலா வருகை அதிமுகவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்... இப்போதைக்கு நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல், 8 கோடி தமிழர்களிடம் மட்டுமே கூட்டணி வைத்துள்ளது.