ஸ்டாலின் மக்களுக்காக போராடுகிறார்... நீண்ட காலமாக உழைக்கிறார்... சீமான் கொடுத்த நற்சான்றிதழ்..!
சென்னை: ஸ்டாலின் மக்களுக்காக போராடுகிறார் என்றும் நீண்டகாலமாக அரசியலில் உழைக்கிறார் எனவும் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திமுகவையும், ஸ்டாலினையும் எப்போதும் கடுமையாக எதிர்த்து பேசி வந்த சீமான், இன்று திடீரென பாராட்டி பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
ஸ்டாலினுக்கும், தினகரனுக்கும், திருமாவளவனுக்கும் இல்லாத தகுதி ரஜினிகாந்துக்கு மட்டும் எங்கிருந்து வந்தது என அவர் வினவியுள்ளார்.
நான் ஏதோ நேரடியாக இந்த இடத்துக்கு வந்துவிடவில்லை... 13 வயதில் கட்சிக் கொடிப் பிடித்தேன் -ஸ்டாலின்
சீமான் பேட்டி
நாம் தாமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் மறைந்த தமிழறிஞர் தொ.பரமசிவனுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் தரப்பில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் தட்டிக்கழிக்காமல் பொறுமையாக பதிலளித்தார்.
குறை சொல்லாதீர்
தமிழர் தமிழர் என்கிறீர்களே தமிழகத்தில் உங்கள் கட்சிக்கு உள்ளாட்சித் தேர்தலில் கூட அங்கீகாரம் கிடைக்கவில்லையே ஏன் என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனால் சூடான சீமான் முட்டாள்தனமான கேள்விகளை கேட்காதீர் எனக் கூறியதோடு, மக்களை குறை சொல்லக்கூடாது என்றும் அங்கீகாரம் கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் உழைப்பது தமது கடமை எனத் தெரிவித்தார். தமிழ் சமுதாயத்திற்கு பாடுபடுவதை பிறவிப்பயனாக கருதுவதாக கூறினார்.
ஸ்டாலின் உழைக்கிறார்
அடுத்ததாக ரஜினிகாந்த் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ஸ்டாலினோடு ரஜினியை ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்றார். நீண்ட காலமாக அரசியலில் உழைப்பவர் ஸ்டாலின் என்றும் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து ஸ்டாலின் போராடுகிறார் எனவும் தெரிவித்தார். மேலும், ஸ்டாலினுக்கும், தினகரனுக்கும், திருமாவளவனுக்கும், அன்புமணிக்கும், அய்யா நல்லகண்ணுவுக்கும் இல்லாத தகுதி ரஜினிகாந்துக்கு மட்டும் எங்கிருந்து வந்தது என வினவினார்.
எம்.ஜி.ஆர். மீது பாய்ச்சல்
நேற்று எம்.ஜி.ஆர். மீது சீமான் பாய்ச்சல் காட்டிய நிலையில் இன்று ஸ்டாலினை புகழ்ந்து சீமான் கருத்து தெரிவித்திருப்பது அரசியலில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மேலும், பெரியவர் என்ற முறையில் வைகோ தன்னை விமர்சிக்கிறார் என்றும் சிறியவர் என்ற முறையில் அதனை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.