ஈழத் தமிழர் குறித்து ஹிலாரி கிளிண்டன் சொன்னதை என்னிடம் பகிர்ந்து கொண்டார் ஜெ.: சீமான்
சென்னை: ஈழத் தமிழர்கள் குறித்து ஹிலாரி கிளிண்டன் கூறியதை என்னிடம் பகிர்ந்து கொண்டார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவை தாம் சந்தித்தது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:
ஜெயலலிதாவை நான் சந்தித்த போது என்னிடம் அன்பாகவும் பரிவாகவும் பேசினார். அப்போது பேசிய நினைவுகள் நீங்காமல் இருக்கின்றன.
இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை; ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி; இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவிக்க ஜெயலலிதாவை சந்தித்தேன்.
ஜெயலலிதா இல்லாத 3 ஆண்டுகள்... கட்சியும், ஆட்சியும் எப்படி இருக்கிறது?
என்னிடம் ஈழம், ஈழத் தமிழர்கள் குறித்து நிறையவே பேசினார் ஜெயலலிதா. ஹிலாரி கிளிண்டன் தம்மை சந்தித்த போது 45 நிமிடம் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து பேசியதாகவும் ஜெயலலிதா கூறினார்.
வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் வராமல் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது; அனைவரும் போராடி வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் எனவும் ஜெயலலிதா கூறினார். இவை அனைத்துமே என்னுடைய நினைவில் இருக்கிறது.
இவ்வாறு சீமான் கூறினார்.