சென்னை மாநகராட்சியை தலித்துகளுக்கான தனித் தொகுதியாக அறிவிக்க சீமான் வலியுறுத்தல்
சென்னை: சென்னை மாநகராட்சியை தலித்துகளுக்கான தொகுதியாக அறிவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்ட அறிக்கை:
உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிற சூழலில் அதற்கு முன்பாக ஆதித்தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய சென்னை மாநகராட்சியைத் தனித்தொகுதியாக அறிவித்து ஆதித்தொல்குடி மக்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என்கிற கருத்தாக்கம் வலுப்பெற்று வருகிறது. அது மிக நியாயமானது; தார்மீகமானது. நாம் தமிழர் கட்சி அதனை முழுமையாக ஏற்று, வழிமொழிகிறது.
சென்னையின் பூர்வக்குடிகளே ஆதித்தமிழர்கள்தான்; சென்னை எனும் மாநகரமே ஆதித்தமிழ் மக்களுக்குச் சொந்தமானதுதான். அவர்கள் இன்றைக்கு மெல்ல மெல்ல நகரத்தின் தலைப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு அடிப்படை வசதிகளும், எவ்வித வாழ்வாதாரமுமற்ற கண்ணகி நகருக்கும், கல்லுக்குட்டைக்கும், செம்மஞ்சேரிக்கும் துரத்தியடிக்கப்பட்டு வலுகட்டாயமாகக் குடியமர்த்தப்படுகிறார்கள்.
எம்ஜிஆர் சொன்ன அந்த வார்த்தை.. அப்படியே கட்டுப்பட்டார் என் அப்பா.. அவரை போய்.. பிரபு வேதனை
வந்தாரை வாழ வைக்கும் இந்நிலத்தில் வந்தவர், போனவரெல்லாம் வசதியாக செம்மார்ந்த வாழ்க்கை வாழ்கிறபோது ஆதிக்குடிகள் சென்னையைவிட்டே அதிகாரத்தின் மூலம் விரட்டியடிக்கப்படுவது எதன்பொருட்டும் சகிக்க முடியாதப் பெருங்கொடுமையாகும். ஆகவே, அத்தகையப் பூர்வக்குடிகளுக்கானப் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டும் பொருட்டு சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மேலும், உள்ளாட்சித் தேர்தலில் நேரடியாகத் தேர்வுசெய்யப்படாது மறைமுகத்தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் ஏறக்குறைய 14,000 துணைத்தலைவர் பதவிகளுக்கும் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசிற்குக் கோரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.