பாபர் மசூதியை இடித்தது சட்டவிரோதம் எனில் இடித்தவர்களுக்கு தண்டனை வழங்காதது ஏமாற்றம்: சீமான்
Recommended Video
சென்னை: அயோத்தி நில உரிமை வழக்கில் பாபர் மசூதியை இடித்தது சட்டவிரோதம் என கூறியுள்ள உச்சநீதிமன்றம் அதை இடித்தவர்களுக்கு தண்டனையும் வழங்காதது பெருத்த ஏமாற்றம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றம் இன்று அளித்த அயோத்தி நில உரிமை வழக்கின் தீர்ப்பு குறித்து சீமான் கூறியுள்ளதாவது:
அயோத்தி நிலம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ளத் தீர்ப்புப் பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்க முடியுமே ஒழிய, நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல எனக் கூறியிருக்கிற உச்ச நீதிமன்றம், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை அடிப்படையிலேயே இத்தகையத் தீர்ப்பை வழங்கியிருப்பது பெருத்த உள்முரண்பாடாகும்.
பாபர் மசூதி இடிப்பை ஒரு மதத்தவரின் இறையியலுக்கு எதிரான ஒரு வன்முறை வெறிச்செயல் எனச் சுருக்க முடியாது. பன்முகத்தன்மையும், சமத்துவமும் கொண்டு வாழும் இந்நாட்டின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்டக் கோரத்தாக்குதலாகும்.
கொடுங்கோலர்களுக்கு தண்டனை
அச்செயலைச் செய்திட்டவர்களை மதவிரோதிகள் என்பதைவிட தேசத்துரோகிகள் என்பதே சரியானது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதைச் சட்டவிரோதமென ஏற்றிருக்கிற உச்ச நீதிமன்றம், அச்செயலை செய்திட்டக் கொடுங்கோலர்களுக்குத் தண்டனையோ, கண்டனமோ தெரிவிக்காதது ஒருபோதும் ஏற்புடைதன்று!
எவ்வகை நியாயம்?
இவ்விவகாரத்தில், இசுலாமியர்கள் மாற்று இடம் கேட்டுப்போராடவில்லை; அவ்விடம் தங்களுக்கே உரித்தானது எனும் தார்மீக உரிமையின் அடிப்படையிலே சட்டரீதியாகவும், சனநாயகரீதியாகவும் போராடினார்கள். அதனை மறுதலித்ததுவிட்டு அவர்களுக்கு மாற்று இடம் கொடுத்து அவர்களை நிறைவு செய்ய முற்படுவது எவ்வகை நியாயம்?
இருதரப்புக்கும் மாற்று இடம்
போதிய ஆவணங்களையும், ஆதாரங்களையும் சமர்பிக்கவில்லையென வக்பு வாரியத்திற்கு நிலத்தை மறுத்த நீதியரசர்கள், எந்த ஆதாரத்தின் அடிப்படையில், எவ்விதத் தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கினார்கள் என்பது விளங்கவில்லை. நம்பிக்கையின் அடிப்படையில்தான் தீர்ப்பென்றால், பெரும்பான்மை இந்துக்களின் நம்பிக்கையைக் காரணமாகக் காட்டி வக்பு வாரியத்திற்கு நிலத்தை வழங்காத உச்ச நீதிமன்றம், அதே நம்பிக்கை இசுலாமிய மக்களுக்கும் இருக்கிறபோது எவருக்கும் நிலத்தை வழங்காது இருவருக்கும் மாற்று இடம் வழங்கிதானே இருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால்கூட குறைந்தபட்ச நியாயம் இருந்திருக்கும்.
நீதி ஒருபோதும் மாறாது
ஆனால், அதனை செய்யாதுவிட்டு ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியிருப்பது வெறுமனே தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல! தீர்ப்புகள் மாறுபடலாம். ஆனால், நீதி ஒருபோதும் மாறாது. அந்நீதியின் பக்கம் நாம் தமிழர் கட்சி இறுதிவரை நிற்கும் என இத்தருணத்தில் பேரறிவிப்பு செய்கிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
திருமாவளவன் கருத்து
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள கருத்து: பாபர் மசூதி வழக்குத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்தையும் ஆதாரங்களையும் வைத்து அளிக்கப்பட்ட தீர்ப்பாக அமையவில்லை. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டும் சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் சமரச முயற்சியின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது.
|
சாஸ்திர அடிப்படையில் தீர்ப்பு
பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் அகழ்வாய்வில் அங்கே கோவில் எதுவும் இல்லை என்னும் போது பாபர் மசூதி இடிக்கப்பட்டது குற்றம்தானே. சாஸ்திரங்களின் அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பில் அரசியல் தலையீடு?
இசுலாமியர்கள் உரியஆவணங்களை ஒப்படைக்கவில்லை எனில் இந்துஅமைப்புகள் என்ன ஆவணங்களை ஒப்படைத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. சாஸ்திரங்களின் அடிப்படையிலாக இந்துக்களின் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக வைத்து மொத்த இடத்தையும் இந்துக்களுக்கே வழங்கியிருப்பது அரசியல்தலையீட்டின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
மசூதிக்கும் அறக்கட்டளை அமைக்கலாம்
நாட்டின் நலன் கருதி, சமூக அமைதியின் தேவை கருதி அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். ராமர் கோவிலை கட்டுவதற்கு மைய அரசு அறக்கட்டளை நிறுவ வேண்டும் என்பதை போல பாபர் மசூதியை கட்டுவதற்கும் ஏன் அறக்கட்டளையை நிறுவக் கூடாது? இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.