மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை முழுமையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்க சீமான் வலியுறுத்தல்
சென்னை; மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு புதிய கல்வி கொள்கையில் மும்மொழிக் கொள்கையை இடம் பெற செய்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தமாட்டோம்; இரு மொழிக் கொள்கையே தொடரும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:
இருமொழிக் கொள்கையில் உறுதி- முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு- நன்றி!
சீமான் சீமான் கோரிக்கை
புதிய கல்விக்கொள்கையின் ஒரு கூறான மும்மொழி கொள்கையைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தமாட்டோம் எனும் தமிழக முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன்! மாநிலங்களின் தன்னாட்சி கல்வியுரிமைகளை மொத்தமாய் பறித்து மத்தியில் அதிகாரங்களைக் குவித்து ஒற்றைப்பாடத்திட்டத்தின் மூலம் தேசிய இனங்களின் வரலாற்றை மறைக்கும் ஒற்றைமயக் கல்விக்கொள்கையை மொத்தமாய் எதிர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று ட்விட்டரில் சீமான் கூறியுள்ளார்.
ராமதாஸ் பாராட்டு
இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது. இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது! மும்மொழிக் கொள்கையை நிராகரிக்க தமிழக அரசு கூறியுள்ள அனைத்துக் காரணங்களும் 3, 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி கொள்கை தொடரும் என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்! என்றார்.
கனமான முடிவு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தமது ட்விட்டர் பக்கத்தில், இருமொழி கொள்கையே தமிழகம் ஏற்கும்: தமிழக அரசின் இந்தமுடிவை விசிக வரவேற்கிறது. பொதுமக்களின் உணர்வுகளையும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையும் ஏற்று தமிழக அரசு இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. களங்கத்தைத் தவிர்க்கும் கனமான முடிவு.
சட்டசபை சிறப்பு கூட்டம்
மும்மொழி வேண்டாம்: தமிழக முதல்வருக்கு நன்றி. ஆனால்,பிறபாதிப்புகள் பற்றி தமிழகஅரசின் நிலை குறித்து எதுவும் இல்லை. உடனே சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை முற்றாக மறுதலிக்கவேண்டும். அதனை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.