விடாப்பிடியாக தனித்தே களம்காணும் சீமான்: இந்த முறையாவது சாதிப்பாரா? இல்லை சறுக்குவாரா?
சென்னை: சில கட்சிகளின் கூட்டணி பேச்சுவர்த்தையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இந்த முறையும் தனித்தே போட்டியிட போகிறோம் என்று கெத்தாக அறிவித்து இருக்கிறது நாம் தமிழர் கட்சி.
2019 மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் 16,45,185 வாக்குகள் அறுவடை செய்து வாக்கு சதவிகிதத்தை 1.07 லிருந்து 3.87 ஆக உயர்த்தி காட்டியது.
இப்படியே தொடர்ந்து முன்னேறி சென்று இருக்க வேண்டிய நாம் தமிழர் 2020 உள்ளாட்சி தேர்தலில் ஆயிரக்கணக்கான பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
தனித்து களம் காணும் நாம் தமிழர்
தமிழக தேர்தல் களம் பரபரக்கத் தொடங்கி விட்டன. தேர்தல் சித்து விளையாட்டுகளை தற்போதே மக்கள் பார்க்க தொடங்கி விட்டனர். கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக ஓயாது பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. சில கூட்டணி மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. சில கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இந்த முறையும் தனித்தே போட்டியிட போகிறோம் என்று கெத்தாக அறிவித்து இருக்கிறது நாம் தமிழர் கட்சி.
செயல்பாடுகள் என்ன?
தொடர்ந்து தேர்தலிகளில் தனித்தே களம்கண்டு ஏமாற்றத்துடன் திரும்பும் நாம் தமிழர் கட்சி இந்த முறை சாதிக்குமா? இதுவரை அக்கட்சியின் செயல்பாடுகள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம். 2009-ம் ஆண்டு இயக்கமாகத் தொடங்கப்பட்ட அமைப்பை, 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றினார் சீமான். தமிழர், தமிழகத்தில் தமிழர்தான் ஆட்சி செய்ய வேண்டும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த சீமானின் உணர்ச்சிகரமான பேச்சுக்களால் நாம் தமிழர் பக்கம் ஏராளாமான தம்பிமார்கள், தங்கைமார்கள் அணிவகுக்க தொடங்கினார்கள்.
முதல் தேர்தல் எப்படி?
சீமானின் உணர்ச்சிமிக்க கூட்டத்துக்கு புதிய தலைமுறையினர் திரள்வது கண்டு பெரிய கட்சிகளான அதிமுக, திமுக கொஞ்சம் ஆடித்தான் போனது என்றே சொல்ல வேண்டும். 2011 சட்டமன்றத் தேர்தல், 2014 மக்களைவைத் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிடாமல் ஜகா வாங்கியது நாம் தமிழர். கட்சி தொடங்கி 6 ஆண்டுகள் கழித்து 2016 சட்டமன்ற தேர்தலை முதன் முறையாக சந்தித்தார் சீமான். அந்த தேர்தலில் எதிர்பார்த்த வரேவேற்பு அக்கட்சிக்கு இல்லை. 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டு, 4,58,104 வாக்குகள் பெற்று 1.07% வாக்குகளுடன் 9-ம் இடத்தில்தான் நாம் தமிழரால் வர முடிந்தது.
அதிகரித்த வாக்கு வங்கி
இதில் எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்காவிட்டாலும் பொதுத்தொகுதியில், பட்டியலின வேட்பாளர்களை நிறுத்தியது; பெண்களுக்கு அதிக இடங்களில் வாய்ப்பளித்தது, திருநங்கையை வேட்பாளராக அறிவித்தது ஆகிய சீமான் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டினார்கள். தொடர்ந்து 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலை எதிர்கொண்டது நாம் தமிழர் கட்சி. இதுவரை எந்த கட்சியும் செய்யாத வரலாற்று நிகழ்வாக மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளில் பெண்களைச் சரிசமமாக வேட்பாளர்களாக நிறுத்தினார் சீமான். நாம் தமிழர் மீது புதிய தலைமுறையினர் கொண்டிருந்த ஆர்வம் இந்த தேர்தலில் நன்றாக தெரிந்தது.38 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் 16,45,185 வாக்குகள் அறுவடை செய்து வாக்கு சதவிகிதத்தை 1.07 லிருந்து 3.87 ஆக உயர்த்தி காட்டியது.
உள்ளாட்சி தேர்தலில் சோகம்
நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மக்களோடு, மக்களாக இணைந்து, அடிமட்ட கிராமங்களிலும் எந்த வித எதிர்ப்பும் இன்றி வேலை செய்தததால்தான் வாக்கு வங்கி அதிகரித்தது என்று கூறப்படுகிறது. இப்படியே தொடர்ந்து முன்னேறி சென்று இருக்க வேண்டிய நாம் தமிழர் 2020 உள்ளாட்சி தேர்தலில் பின்தங்கியது யாரும் எதிர்பாராதது. ஆயிரக்கணக்கான பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வெறும் ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது நாம் தமிழர் கட்சி. இது அக்கட்சியின் தொண்டர்களிடம் சோர்வை உண்டாக்கியது.
பெருங்கூட்டம் வாக்களர்களாக மாறவில்லை
உள்ளாட்சி தேர்தல் தந்த முடிவுகளுடன் இந்த முறையும் விடாப்பிடியாக தனித்த களம் காண்கிறார் சீமான். சீமான் பேசும்போது கட்டுக்கடங்காத பெருங்கூட்டம் கூடி இருப்பது வழக்கம். ஆனால் இந்த கூட்டத்தை நாம் தமிழர் வாக்காளர்களாக மாற்ற முடியாததுதான் அக்கட்சியின் மிகப்பெரும் பலவீனம். நாம் தமிழர் காலம் காலமாக பாஜக பீ டீம் என்று கூறப்படுகிறது. இந்த கூற்றும் நாம் தமிழர் வாக்கு வங்கிக்கு பெரும் தடையாக உள்ளது.நாம் தமிழர் திமுகவைதான் குறை சொல்லும்; ஆளுங்கட்சி அதிமுகவை குறை சொல்வதில்லை என்ற பேச்சு உலா வருவது பலவீனத்தில் ஒன்றாகும்.
உட்கட்சி பூசல் பெரும் பலவீனம்
அடுத்தது உட்கட்சி பூசல். பெரும் கட்சிகளைபோல் நாம் தமிழரும் உட்கட்சி பூசலில் சிக்கிக் கொண்டுள்ளது. சீமான் மீது கொண்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியின் கல்யாண சுந்தரம், ராஜிவ்காந்தி உள்ளிட்ட சிலர் வேறு கட்சிகளில் சேர்ந்து விட்டனர். அவர்களுக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது என்பதால் இதுவும் நாம் தமிழருக்கு பலவீனமாக அமைந்து விட்டது.யார் கட்சியை விட்டு சென்றால் என்ன; கட்சிக்காக நான் உழைப்பேன் என்று சீமான் பக்கம் நிற்கும் தம்பிமார்கள் நாம் தமிழருக்கு மிகப்பெரிய பலம். மற்ற கட்சிகளை விட சமூக வலைத்தளங்களில் ஒருபடி மேலே நிற்பதும் இந்த கட்சிக்கு பலம்தான்.
வித்தியாசமான அரசியல் பெரும் பலம்
மற்ற கட்சிகள் செய்ய தயங்கும் அரசியல் ரீதியாக மிகவும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குப் போட்டியிட வாய்ப்புக் கொடுத்தது; ஒரு சமூகம் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் பெரும்பான்மையாக இருந்தால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவரைத் தவிர்த்துவிட்டு, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியது என வித்தியாசாமான அரசியலை முன்னெடுக்கும் திட்டங்களும் நாம் தமிழருக்கு பலமாகும்.
சாதிப்பாரா சீமான்?
தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு, தமிழர்களுக்கு முன்னுரிமை என்ற சொல்லும் சீமானுக்கு வாக்குகளை அள்ளிக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்படி பல்வேறு வகையான பலம், பலவீனத்துடன் பெரிய கட்சிகளை தனித்தே சந்திக்கும் சீமான் சாதிப்பாரா? அலல்து சறுக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.