ஒப்பற்ற திறன்.. மங்காத போராட்ட உணர்வால் வளர்ந்த தலைவன்.. திருமாவளவனுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆதித்தமிழ் குடியில் மிகவும் எளிய பின்புலத்தில் பிறந்து சாதிய அடக்குமுறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகி ஆழ்தளத்திற்குத் தள்ளப்பட்டபோதும் தனது ஒப்பற்ற செயல்திறத்தாலும், மங்காத போராட்ட உணர்வினாலும் தலைவனாக வளர்ந்து உயர்ந்து சாதிய பேதமற்ற சமூக விடுதலைக்காகவும், தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை மீட்புக்காகவும் அயராது களத்தில் நிற்கிற தமிழ்ச்சமூகத்தின் அறிவார்ந்த ஆளுமை அன்பிற்குரிய அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளை உரித்தாக்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
அண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும்! தமிழ்ச்சமூகம் விடுதலையை எட்டட்டும்! இவ்வாறு அந்த வாழ்த்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.