பொருளாதார வீழ்ச்சியால் அச்சமாகவும் பதற்றமாகவும் இருக்கிறது... சீமான்
சென்னை: நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை நினைக்கும்போது அச்சமாகவும் பதற்றமாகவும் இருக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கவலை தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:
பொருளாதார பாதிப்புகள் உருவான பின்னர்தான் வரிகளைக் குறைக்க வேண்டும் என்கிற எண்ணமே மத்திய அரசுக்கு வந்திருக்கிறது. இந்த பொருளாதார வீழ்ச்சி என்பதை எப்படி சரி செய்யப் போகிறோம் என்பது யாருக்கும் தெரியாது.
முந்தைய பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு நடவடிக்கை ஆகியவற்றின் போதே இது மிகப் பெரிய பின்னடைவைத்தான் ஏற்படுத்தும் என்று சொன்னோம். அப்போது இருந்து இதைத்தான் கூறிவந்தோம்.
காஷ்மீரிலிருந்து வந்த 100 பேர் குழு.. டெல்லியில் அமித்ஷாவுடன் திடீர் சந்திப்பு
ஆனால் நாங்கள் தெரிவித்த கருத்தை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இப்போது வரிகளைக் குறைக்கிறோம் என்கிறார்கள். அப்படியானால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றுதானே அர்த்தம். அதனால்தானே வரிகளைக் குறைப்பது பற்றி பேசுகிறீர்கள்.
தற்போதைய நாட்டின் பொருளாதார வீழ்ச்சியானது பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது. இதை எப்படி சரி செய்யப் போகிறோம் என்பது தெரியவில்லை.
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.