சீமான்.. இன்னும் இறங்கி அடிக்க.. கொஞ்சம் இறங்கி வந்தால் போதும்.. வருவாரா
வேகமாக வளர்ந்து வரும் சீமான் ஒரேயொரு விஷயத்தில் தன்னை மாற்றி கொள்ள முன்வரவேண்டும்
Recommended Video
சென்னை: சீமான் இதுவரை கேட்ட கேள்விகளுக்கு தமிழக அரசியல்வாதிகளிடமிருந்தே குறிப்பாக திராவிட கட்சிகளிடமிருந்தே நியாயமான பதில் வராதுதான்!
ஒவ்வொரு கேள்விகளையும், ஒவ்வொரு பிரச்சினையையும் ஆழமாக வேரூன்றியே யோசிக்கிறார் சீமான். தனக்கென்று ஒரு பாதை வகுத்து கொண்டாலும், அதை சந்தர்ப்பவாதத்துக்கு ஒருநாளும் பயன்படுத்தியது இல்லைதான்.
அதே சமயம் சமுதாயத்தை அசைத்து பார்க்கக்கூடிய, சம்பவங்களுக்கு எதிரான கேள்விகளை நடுமண்டையில் ஆணி அடித்தாற்போல கேட்டுவிடவும் செய்கிறார். சீமானின் பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் திரண்டு வரவே செய்கிறார்கள். இப்போதுள்ள நிலையில், பிரச்சாரம் செய்து வரும் பிரதான கட்சிகளுடன் ஒப்பிடும்போது சீமான் பேச்சுக்கு வரும் கூட்டம் நிச்சயம் கவனிப்புக்குரியதாகவே உள்ளது.
ஆனால்!
இவரை நம்பலாமா?
"சீமான் நல்லாதான் பேசறாரு.. நாக்கை புடுங்கிக்கிற மாதிரி நல்லாதான் கேள்வி கேட்கிறாரு.. ஆனாலும் ஓட்டு போட தயக்கமா இருக்கே.. இவரை நம்பலாமா? நம்பப்படாதா?" என்பதுதான் இன்றைய தமிழக மக்களின் பெரும்பாலானோர் மனநிலை!
கன்னத்தை கிள்ளிய பெண்.. வெட்க சிரிப்பில் ஸ்டாலின்.. கனிமொழியை கையை பிடித்த பாட்டி.. பாச மழையப்பா!
தமிழ் இனம்
இதற்கு முக்கிய காரணம், சீமானின் கொள்கை. பரந்து விரிந்து கட்டுக்கடங்காமல் ஓடவேண்டிய நாம் தமிழர் கட்சி, இன்று "தமிழ் இனம்" என்ற ஒரு ஒற்றை கூட்டுக்குள் அடைத்து கொண்டு தன்னை சுருக்கி கொண்டதோ என்று தோன்றுகிறது. தமிழின உணர்வு அவசியமானதுதான்.. அத்தியாவசியமானதுதான்.. ஆனால் இந்த உணர்வே சீமானை தனிப்படுத்தி வைத்துள்ளதோ என்றும் சந்தேகம் எழுகிறது. எந்த நல்லதையுமே ஒரு ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால்தான் அதை செயல்படுத்த முடியும்.
திராவிட கட்சிகள்
சீமான் சொல்வது போல திராவிட கட்சிகள் 50 வருடங்கள் தமிழகத்தை மாறி மாறி ஆண்டு நாசம் செய்துவிட்டதாகவே வைத்து கொள்வோம், அதற்காக அந்த கட்சிகளின் பங்கு நம் மாநிலத்தை இல்லவே இல்லை என்று ஒரேயடியாக சொல்லிவிடவும் முடியாது. அப்படி எதுவுமே 50 வருடம் நடக்காமல் இருந்திருந்தால், புரட்சி என்றைக்கோ தமிழகத்தில் வெடித்திருக்கும்!
அங்கம்தான்
சீமான் சொல்வது போல, அவ்வளவு சீக்கிரம் 2 திராவிட கட்சிகளை வீட்டுக்கு அனுப்பிவிட முடியாது. காரணம் இவை ஆழமாக வேரூன்றி நிற்கின்றன. மக்களும் கூட இதில் ஒரு முக்கிய அங்கம்தான். எனவே சீமானும் சற்றே இறங்கி இந்தக் கட்சிகளின் ஒத்த கருத்துக்களுக்கு கைகோர்த்து இணைந்து சென்றால் சீமானின் உயரம் எங்கோ இருக்கும்!
வேல்முருகன்
சரி.. திராவிட கட்சிகளே வேண்டாம் என்றால், ஒரு மாற்றத்தை புகுத்தவே "ரிஸ்க்" எடுத்துள்ள கமலுடன் கை கோர்க்கலாம். அல்லது மண்ணையும், மக்களையும் பாதிக்கும் பிரச்சனைகளை கையில் எடுத்து வரும் வேல்முருகனுடன் ஒன்றிணையலாம். இதற்கெல்லாம் சகிப்புத்தன்மை மிக அவசியம்.. நீக்குப் போக்கு, விட்டுக் கொடுத்தல் என்று சின்ன சின்ன சமரசங்களும் தேவை.. இதெல்லாம் இப்போது சீமானுக்குத் தேவை. காரணம், மற்ற கட்சிகளை விட சீமானிடம் நல்ல கொள்கைகள் உள்ளன. தொலைதூரப் பார்வை உள்ளது. ஒப்புக்காக எதையும் இவர் சொல்வதில்லை. இனத்தின் விடுதலைக்காக பேசுகிறார்.. அது நிறைவேற இன்னும் கூடுதல் பலம் சீமானுக்கு நிச்சயம் தேவை.
விமர்சிப்பு
அதிமுகவின் நிழல்தான் சீமான் என்ற ஒரு கருத்து உள்ளது. இதற்கு காரணம், தனி ஈழத்துக்காக ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள்தான் என்று ஏற்கனவே சீமான் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் இப்போதும்கூட அதிமுகவைவிட திமுகவை அதிகம் விமர்சிப்பதாகவும், காங்கிரஸைவிட பாஜகவை அதிகம் விமர்சிப்பதாகவும் ஒரு பேச்சு உள்ளது. இதையும் சீமான் உடைத்தெறிய வேண்டும். பாஜகவைப் போலவே காங்கிரஸ் மீதும் தமிழ் மக்களுக்கு உலகளாவிய அளவில் கடும் அதிருப்தி இருப்பதை நாம் மறுக்க முடியாது.
மன்சூரலிகான்
"நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது" என்று சொன்ன சீமான் இன்று தன் கட்சியில் மன்சூரலிகானுக்கு சீட் தந்திருக்கிறார். அப்படியானால் சீமான் தன் நிலைப்பாட்டை மாற்றி கொண்டுவிட்டாரா என்பதை தெளிவுபடுத்தவில்லை. சின்ன சின்ன விஷயங்களை தெளிவுபடுத்திவிட்டால் போதும்.. சீமான் பட்டபாடுகளுக்கு எல்லாம் முடிவு சுபமாக வந்து சேரும்! இல்லையென்றால் "வெற்றுக்கூச்சல் கறிக்குதவாது" என்பதுபோல் ஆகிவிடும்!