தீவிர விசுவாசியாக இருந்தும் ஜெயலலிதாவே கொடுக்காத கவுரவம்.. சேகர் பாபுவுக்கு அமைச்சரவையில் இடம்!
சென்னை: கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த பி.கே. சேகர் பாபுவுக்கு ஜெயலலிதா கொடுத்த கவுரவத்தை மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் முதல்வர் உள்பட 34 துறைகளுக்கான இலாக்காக்கள் இன்று வெளியானது. இதில் 15 புதுமுகங்களுக்கு ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்துள்ளார். அது போல் முன்னாள் அமைச்சர்கள் 19 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் புதுமுகங்களில் மிகவும் முக்கியமானவர் பி.கே.சேகர் பாபு. இவர் கடந்த 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தல்களில் ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.
செம.. சாதித்த முத்துநகர்.. ஸ்டாலின் அமைச்சரவையை அலங்கரிக்கும் கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்
வடசென்னை மாவட்ட செயலாளர்
ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாவார். இவர் வடசென்னை மாவட்ட அதிமுக செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். தமிழகத்திலேயே அதிக பொதுக் கூட்டங்களை நடத்தியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அதிமுகவின் அவைத் தலைவரான மதுசூதனனின் உறவினர் என்பதால் ஜெயலலிதாவின் நெருக்கமான வளையத்திற்கு நுழைய சேகர் பாபுவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆர்ப்பாட்டங்கள்
திமுக அரசுக்கு எதிராக போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தார். இந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு மாநகராட்சி தேர்தலின்போது திமுகவினர் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவரது மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
வடசென்னை அதிமுகவினர் எதிர்ப்பு
அவருக்கு பதில் அந்த பதவிக்கு டி ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார். இதையடுத்து வடசென்னை மாவட்ட அதிமுகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை போயஸ் தோட்டத்தை முற்றுகையிட்டு போராட்டங்களை செய்தசனர். எனினும் சேகர் பாபுவின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
திமுகவில் இணைந்தார் சேகர் பாபு
இதனால் மனவேதனையடைந்த சேகர்பாபு தனது ஆதரவாளர்களுடன் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இணைந்தார். இணையந்த மாத்திரத்திலேயே அவருக்கு 2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஆர் கே நகரில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றார். ஆனால் சேகர் பாபு தோல்வி அடைந்தார்.
புத்திசாதுர்யம்
எள் என்றால் எண்ணெய்யுடன் நிற்கும் வேகம் கொண்ட சேகர் பாபு களத்தில் இறங்கி வேலை செய்பவர். இதையடுத்து 2016-ஆம் ஆண்டு துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஸ்டாலினின் நெருக்கமானவர்களில் இவரும் ஒருவர்.
கவுரவம்
2021 ஆம் ஆண்டும் இவருக்கு துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த தேர்தலிலும் மீண்டும் துறைமுகம் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இவரது அயராத உழைப்பால் அன்று ஜெயலலிதாவே கொடுக்க மறந்த கவுரவத்தை இன்று ஸ்டாலின் கொடுத்துள்ளார். ஆம். ஸ்டாலின் அமைச்சரவையில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சேகர்பாபுவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.