காலால் செல்ஃபி.. கலக்கலான ஓவியம்.. ரஜினிகாந்த்துடன் பிரணவ் நெகிழ்ச்சி சந்திப்பு
சென்னை: பிரணவ் ஞாபகம் இருக்கிறதா? கேரளாவில் பேரிடர் நிவாரண நிதிக்காக, தனது பங்கை முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்துக் கொடுத்து, கால்களால் செல்ஃபி எடுத்தாரே அதே பிரணவ்தான்.
பினராயி விஜயனுடன் அவர் அப்படி எடுத்த செஃல்பி, லெக்ஃபி என்றும் அழைக்கப்பட்டு, நாடு முழுவதும் வைரலானது. பிறவியிலேயே பிரணவுக்கு கைகள் இல்லை. எனினும், தனது கால்களை பயன்படுத்தி தன்னம்பிக்கையுடன் பல சாதனைகளை படைத்து வருகிறார். படம் வரைவது, போனை ஆபரேட் செய்வது உள்ளிட்ட பல விஷயங்களை அசத்தலாக செய்து வருகிறார்.
சாதாரண மனிதர்கள் செய்வதைவிடவும், நிறைய வேலைகளை அநாயாசமாக இவர் செய்கிறார். சமீபத்தில் சச்சின் டெண்டுல்கரையும் இவர் சந்தித்தார். பிரணவுக்கு ஒரு ஆசை இருந்தது. சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் உள்ள ரஜினிகாந்த்தை நேரில் சந்திக்க வேண்டும் என்பதுதான், அந்த ஆசை.
இதுகுறித்த தகவலை அறிந்த ரஜினிகாந்த், பிரணவுக்கு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து சென்னை போயஸ் இல்லத்திற்கே வரவழைத்துள்ளார். இன்று மாலை ரஜினிகாந்த்தை பிரணவ் மற்றும் அவர் பெற்றோர், ரஜினிகாந்த்தை சந்தித்னர்.
சுமார் அரை மணி நேரம், பிரணவிடம் பேசிக்கொண்டு இருந்தார் ரஜினிகாந்த். இதன்பிறகு தனது டிரேட் மார்க் லெக்ஃபி போட்டோவை எடுத்துள்ளார் பிரணவ். மேலும், தான் வரைந்த ரஜினிகாந்த் ஓவியத்தையும், பரிசாக வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறி தனது தொலைபேசி எண்ணையும் பிரணவுக்கு வழங்கினாராம் ரஜினிகாந்த்