நியாய விலைக்கடைகளில் ரூ.500-க்கு 19 வகை மளிகைப் பொருட்கள் விற்பனை
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக்கடைகளில் 19 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய ஒரு தொகுப்பு பை ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தமிழகத்தில் கோடிக்கணக்கான பேர் வேலையின்றி வருமானமின்றி தவித்து வருகின்றனர். மேலும் அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க முடியாமல் அவர்கள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வெளிச்சந்தையை விட குறைவான விலையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறக் கூடிய வகையில் மளிகைப் பொருட்கள் தொகுப்பு பை திட்டத்தை அறிவித்துள்ளது தமிழக அரசு.
மளிகைக்கடைகளில் வாங்குவதை விட குறைந்த விலையில் அதிக பொருட்களை உள்ளடக்கிய வகையில் விற்பனை செய்யப்படும் இந்த தொகுப்பு பையின் விலை ரூ.500. மேலும், அந்தப் பையில் உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், தோசை புளி, பொட்டுக்கடலை, நீட்டு மிளகாய், தனியாத்தூள், மஞ்சள் தூள், டீ தூள், உப்பு, பூண்டு, கோல்டுவின்னர் எண்ணெய் பாக்கெட் 200 மில்லி, பட்டை, சோம்பு, மிளகாய் தூள் ஆகிய 19 பொருட்கள் அளிக்கப்படுகின்றன.
நியாயவிலைக்கடைகளில் ரூ.500-க்கு அளிக்கப்படும் பொருட்களின் அளவு;
உளுந்தம் பருப்பு - 1/2 கிலோ
துவரம் பருப்பு - 1/2 கிலோ
கடலைப்பருப்பு - 1/4 கிலோ
மிளகு -100 கிராம்
சீரகம் -100 கிராம்
கடுகு -100 கிராம்
வெந்தயம் -100 கிராம்
தோசை புளி -250 கிராம்
பொட்டுக்கடலை -250 கிராம்
நீட்டு மிளகாய் -150 கிராம்
தனியாத்தூள் -200 கிராம்
மஞ்சள் தூள் -100 கிராம்
டீ தூள் -100 கிராம்
உப்பு -1 கிலோ
பூண்டு -250 கிராம்
கோல்டுவின்னர் எண்ணெய் -200 மில்லி
பட்டை -10 கிராம்
சோம்பு -50 கிராம்
மிளகாய் தூள் -100 கிராம்
மேற்கண்ட இந்த 19 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் இனி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதன் மூலம் கோடிக்கணக்கான பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.