ஓ.. எஸ்பி. பாலசுப்பிரமணியம் பத்தி கேட்கறீங்களா.. நான் "அவரை" நினைச்சிட்டேன்.. தலையை சுற்றவைத்த ராஜு
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணத்துக்கு செல்லூர் ராஜு இரங்கல் தெரிவித்துள்ளார்
சென்னை: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.. அதற்கு அமைச்சர் அளித்த பதிலை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டனர்!
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கூட்டுறவு துறையின் வளர்ச்சி திட்டங்கள் என்னென்ன என்று நமக்கு உடனே நினைவுக்கு வரவே இல்லை.. ஆனால், அத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சொல்லிவரும்... செய்து வரும் விஷயங்கள்தான் நம்மை திக்குமுக்காட செய்து வருகின்றன.
விஞ்ஞானி முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியரே என்பது முதல் பல பட்டங்களை மக்கள் வாரி வாரி வழங்கி வந்தாலும், அவரது சர்ச்சை பேச்சுக்களும், சீரியஸ்தன்மை இல்லாத பேட்டிகளும் சில மாறவே இல்லை.
இளையநிலா எஸ்.பி.பி வாழ்க... நூற்றாண்டின் நாயகன் எஸ்பிபி ஐயா வாழ்க... ரசிகர்கள் முழக்கம்!!
நல்ல விஷயம்தான்
பொதுவாக, இவர் மனசில் எதையும் வைத்து கொண்டு பேசமாட்டார்.. வெள்ளந்தி மனிதர்.. உள்நோக்கத்துடன் பேசுவதோ, மறைமுகமாக அவர்கள் மனம் புண்படும்படியாக பேசுவதோ இருக்காது.. யாரையும் காயப்படுத்த மாட்டார். அந்த வகையில் நல்ல விஷயம்தான்.
ஆட்சி
உளறலே ஆனாலும் எதையாவது பேசி மக்களிடம் தன் இருப்பையும், தன் பெயரையும், தன் ஆட்சியையும் நினைவுபடுத்தி கொண்டே வருவதுகூட ஒரு தந்திரம்தான்... எப்படியாவது நாம் பேசப்பட்டு விட வேண்டும் என்று நினைத்து விடுகிறாரோ, அதன்மூலம் வரும் பாதிப்புகளை பற்றியெல்லாம் இவர் கவலைப்படுகிறாரா இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் ஒரு அமைச்சருக்கு சீரியஸ்தன்மை என்பது நிறையவே தேவைப்படுகிறது.. ஒருசில விஷயங்களிலாவது யோசித்து பேசுவதும், நிதானித்து பேசுவதும் அவசியமாகிறது.
திண்டுக்கல்
நேற்றுகூட எஸ்பிபி மரணம் குறித்து பேசும்போது இப்படித்தான் எதையோ சொல்லிவிட்டார்.. திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் கூட்டுறவுத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.. இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.. அப்போது, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இரங்கல்
அதற்கு அவர், "எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தனது இரங்கலை தெரிவித்திருப்பார்... தற்போது நானும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஒரு சிறந்த மனிதர்... மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது அதிக அன்பு கொண்டவர்... எப்படியென்றால் அவர் எதிர்க்கட்சியில் இருந்த போது கூட ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அவர் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்டது என்று கூறிக்கொண்டிருந்தார்" என்று சொல்லி கொண்டே போனார்.
பாடகரா
இதை கேட்டு செய்தியாளர்கள் அதிர்ந்து போய்விட்டனர்.. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு குறித்து கேட்டால் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் பற்றி பேசுகிறாரே? என்று குழம்பினர். இதை பார்த்தபிறகுதான் அமைச்சர் சுதாரித்து கொண்டார்.. "ஓ.. நீங்கள் எந்த பாலசுப்பிரமணியத்தை கேட்கிறீங்க? பாடகர் பாலசுப்பிரமணியமா?
சிறந்த பாடகர்
நாங்கள் ஆய்வு கூட்டத்தை முடித்துக்கொண்டு வந்தவுடன், நீங்கள் பாலசுப்பிரமணியம் என்று கேட்டதால் விவசாய மசோதாவுக்கு எதிராக மாநிலங்களவையில் பேசிய எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்தை பற்றி கேட்கிறீர்களோ என்று நினைத்துவிட்டேன்... பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிறந்த பாடகர்... லட்சக்கணக்கானோரின் இதயத்தை தனது இனிய குரலால் கட்டிப்போட்டவர்... அவருடைய மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.
முணுமுணுப்பு
அமைச்சர் இதை தெரியாமலேயே சொல்லிவிட்டார் என்றேகூட வைத்து கொள்வோம்.. ஒரு பெரிய காங்கிரஸ் தலைவரின் தற்போதைய நிலை பற்றிகூடவா இவருக்கு தெரியாமல் இருக்கும்? "முதலமைச்சர் இரங்கல் சொல்லி இருப்பார் என்பது வரை எப்படி இவரால் அப்டேட் ஆகாமல் பேச முடிகிறது" என்று அதிர்ச்சியாகவே உள்ளது என்று செய்தியாளர்கள் முணுமுணுத்தபடியே கலைந்து சென்றனர். இரங்கலா??