ஜெயலலிதா போல் குட்டி கதை கூறி அசத்திய செல்லூர் ராஜூ.. நிஜமாகவே நீங்கள் வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்!
Recommended Video
சென்னை: ஜெயலலிதா போல் சட்டப்பேரவையில் குட்டிக் கதை ஒன்றை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதன் மூலம் ஸ்டாலினுக்கு பஞ்ச் டயலாக்கை வைத்து அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தினார்.
ஜெயலலிதா, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் தாங்கள் பங்கேற்கும் விழாக்களில் குட்டிக் கதைகளை கூறி மற்றவர்களை உற்சாகப்படுத்துவர். அரசியல்வாதிகள் குட்டிக் கதைகளை வைத்து எதிராளிகளை விமர்சனம் செய்வர்.
ரஜினிகாந்த் போன்றோர் அந்த கதையின் மூலம் வாழ்க்கையை கற்றுக் கொடுப்பார். இவையெல்லாம் ரசிக்கும்படியாகவே இருக்கும்.
திருமணம்
அந்த வகையில் நேற்று கூட்டுறவுத் துறை மீதான மானியக் கோரிக்கையையொட்டி அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் ஒரு தந்தை தனது மகளின் திருமணத்துக்காக வரன் பார்த்துக் கொண்டிருந்தார்.
பெண்ணுக்கு பொருத்தம்
இதற்காக பெண்ணின் ஜாதகத்தை தரகரிடம் கொடுத்தார். அவரும் பெண்ணுக்கேற்ப ஒரு ஜாதகத்தை கொண்டு வந்ததுடன் இந்த வரன் 10-க்கு 8 பொருத்தங்கள் உள்ளன என தெரிவித்தார். இதனால் பூரிப்படைந்த தந்தை, இதை விட பெண்ணுக்கு பொருத்தமான வரன் வேறு என்ன இருக்க முடியும் என கருதி, இந்த வரனையே பேசி முடித்தார்.
வாயில் போட்டு
மணமேடையில் மணமக்கள் திருமணச் சடங்குகளை செய்துக் கொண்டிருந்தனர். அப்போது யாகக் குண்டத்தில் போடுவதற்காக பொரியை மாப்பிள்ளையிடம் கொடுத்தார் புரோகிதர். அதற்கு அந்த மாப்பிள்ளையோ சாப்பிடத்தான் கொடுக்கிறார்கள் என நினைத்து வாயில் போட்டுக் கொண்டார்.
தாலி கொடுத்தார்
உடனே புரோகிதர், யாக குண்டத்தில் போட சொன்னால் அதை போய் வாயில் போடுகிறாயே என கடிந்து கொண்டார். உடனே அந்த மாப்பிள்ளை வாயில் இருந்து எடுத்த பொரியை யாக குண்டத்தில் போட்டார். இதனால் கோபமடைந்த புரோகிதர், தாலியை எடுத்து கொடுத்தார்.
திருமணத்துக்கு
இதையடுத்து மாப்பிள்ளையோ நான் எதை செய்தாலும் அதில் நீங்கள் குறை காண்கிறீர்கள். எனவே தாலியை நீங்களே கட்டிவிடுங்கள் என கூற புரோகிதர், மணப்பெண் உள்பட திருமணத்துக்கு வந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
திருமணத்தை
பின்னர் பெண்ணின் தந்தையிடம் வந்த தரகர், அய்யா 10 பொருத்தங்களில் சொல் புத்தி, சுயபுத்தி ஆகிய இரு பொருத்தங்கள் இவருக்கு இல்லை. மீதமுள்ள 8 பொருத்தங்கள் இருக்கிறது என்றார். உடனே திருமணத்தை தந்தை நிறுத்தினார்.
பாராட்டு
இந்த கதையில் வரும் மாப்பிள்ளை போலத்தான் சில பேருக்கு மணமேடை அமையும், மணபொருத்தமும் அமையும். ஆனால் திருமணம் மட்டும் நடக்கவே நடக்காது என ஸ்டாலின் முதல்வராக முடியாது என்பதை சூசகமாக சொல்லினார். பின்னர் குட்டிக் கதை கூறிய செல்லூர் ராஜூவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டினார்.