எள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் ... மீண்டும் பரபரப்பை கிளப்பிய செல்லூர் ராஜூ
சென்னை: என்னை எள்ளி நகையாடினாலும் சரி நான் சொன்னது நடக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ என்றாலே அங்கு ஒரு பஞ்சாயத்து ரெடியாக இருக்கும். அது போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் மதுரை மாவட்டம் சிட்னி நகரம் போல் மாற்றப்படும் என கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
அவ்வளவுதான் நெட்டிசன்கள் இரவு பகல் பாராது கருத்துகளை பதிவு செய்தனர். அதில் மதுரை கிட்னிக்கு மட்டுமா பேமஸ், இனிமே #சிட்னி க்கும் பேமஸ் என அமைச்சரை கலாய்த்து வந்தனர்.
அமைச்சர்கள்
இந்நிலையில் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர் பி உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாற்றம் இல்லை
அப்போது செல்லூர் ராஜூ பேசுகையில் சில மாதங்களுக்கு முன்பு, மதுரை சர்வதேச தரத்தில் சிட்னியாக மாறும் என்றேன். எல்லாரும் எள்ளி நகையாடினர். சமூக வலைத்தளங்களில் என்னை கொச்சைப்படுத்தினர். அதற்காக நான் வருத்தப்படவில்லை. ஆனால், நான் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை.
சுற்றுலா பயணிகள்
6 அடுக்கு பஸ் நிலையம் ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மதுரையை சர்வதேச தரத்தில் மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பெரியார் பஸ் நிலையத்தில் 6 அடுக்கு அதிநவீன பஸ் நிலையம், மீனாட்சியம்மன் கோயில், நாயக்கர் மகால் போன்ற முக்கிய தலங்கள் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில் மேம்படுத்தப்படவுள்ளன.
உலக தரத்தில்
பெரியார் பஸ் நிலையத்தின் கீழ் தளத்தில் பெரிய வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்படுகிறது. அதனால், சுற்றுலாத் தலங்களுக்கு இனி எளிதாக மக்கள் சென்று வரலாம். சாலைகளும் உலக தரத்தில் மேம்படுத்தப்படுகிறது.
18 மாதங்கள்
வைகை ஆறு, மதுரையின் கலாசார மையமாக மாற்றப்படுகிறது. இந்த ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டங்களால் மதுரை கண்டிப்பாக சிட்னி நகராக மாறும். அதற்கு இன்னும் 18 மாதங்கள் பொறுத்திருங்கள் என்றார் செல்லூர் ராஜூ.