சென்னைவாசிகளே அச்சம் வேண்டாம்...செம்பரம்பாக்கம் ஏரி இப்போதைக்கு திறக்கப்படாது
அதிக கனமழை பெய்தால் தான் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் கூறியுள்ளார்.
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இப்போதைக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அசோகன் கூறியுள்ளார். ஏரி திறப்பு குறித்து அச்சப்பட வேண்டாம் என்றும் 2015ல் நடந்ததை போல கனமழை பெய்தால் தான் தண்ணீர் திறக்கப்படும் என்றும் மக்களுக்கு முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார் தலைமை பொறியாளர் அசோகன்.
Recommended Video
வடகிழக்கு பருவமழை வந்தாலே சென்னைவாசிகளுக்கு நினைவுக்கு வருவது 2015ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளம்தான். செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட நிலையில் கனமழையும் இணைந்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது. பலர் குடியிருப்புகளை விட்டு வெளியேறினர்.
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்தே சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், நீர்மட்டம் 21.13 ஆக உயர்ந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டத்தை எட்ட இன்னும் 3 அடியே இருப்பதால், இன்று மாலைக்குள் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படும் என கூறப்பட்டது.
திருநீர் மலை, குன்றத்தூர், வழுதலம்பேடு, நத்தம் உள்ளிட்ட ஏரியின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களும், கூவம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களும் அச்சமடைந்தனர்.
செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கியது.. தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
செம்பரம்பாக்கம் ஏரியை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். ஏரியை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அசோகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போதைக்கு தண்ணீர் திறக்கப்படாது என்று கூறினார். கடந்த 2015ல் நடந்ததை போல கனமழை பெய்தால் தான் தண்ணீர் திறக்கப்படும் என்றும் கூறினார்.
தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு குறைந்து விட்டது என்றும் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஏரி நீர் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.