பொன் மாணிக்கவேல் என்றால் அதிரடி.. நாளை முதல் அது மிஸ்ஸாக போகுது!
நாளை பணி ஓய்வு பெறுகிறார் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்
Recommended Video
சென்னை: "பொன்.மாணிக்கவேலின் அதிரடிகளை பார்க்கும்போது விஜயகாந்த் நடித்த படங்கள்தான் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது" என்று பிரேமலதா சொன்ன வரிகள் அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மை! அதிரடி என்றால் அது பொன்.மாணிக்கவேல்தான் என்பதை நிரூபித்து விட்டார்.
வணங்கக்கூடிய, போற்றக்கூடிய நம் நாட்டின் கலைப்பொக்கிஷங்களின் கடத்தல்கள் தலைதூக்க ஆரம்பித்தபோதுதான் தமிழக காவல்துறை திணற ஆரம்பித்தது.
கோயில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிட்டது என்பதை உணர்ந்த பிறகுதான் இதனை சிறப்பாக கையாளக்கூடிய ஒருவர் வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு, அதற்கு பொன்.மாணிக்கவேலை நியமித்தார்கள்.
சர்வதேச அளவில் கடத்தல்
தேடுதல் வேட்டை என்ற வார்த்தையை கண்ணெதிரே தினந்தோறும் நடத்தி காட்டினார் பொன்.மாணிக்கவேல். சுறுசுறுப்பான அந்த வேட்டையில் சர்வதேச அளவில் குற்றம் புரிந்த குள்ளநரிகள் பலர் சிக்கினார்கள். மடியில் கணம் உள்ளவர்களுக்கெல்லாம் குலை நடுங்க ஆரம்பித்தது.
முற்றுப்புள்ளி
அதன் விளைவு, சிலை கடத்தல் விஷயங்களை பொன்.மாணிக்கவேல் கையாளக்கூடாது என்று முட்டுக்கட்டை அதிகார துஷ்பிரயோக ரூபத்தில் எழ ஆரம்பித்தது. ஆனாலும். இதனை சிறப்பாக கையாளக்கூடியவர் இவர்தான் என நீதிமன்றமே செவிளில் அறைந்தால் போல சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
வழக்கை மாற்ற துடிப்பு
வேரூன்றி கிடந்த அரை நூற்றாண்டு சிலை கடத்தல்களை அதன் அஸ்திவாரத்துடன் பலமாக அசைத்து வெளியே எடுத்து போட்டார் பொன்.மாணிக்கவேல். ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளதை வெட்ட வெளிச்சமாக்கினார். இந்த விஷயம் வெளியே வந்துவிடக்கூடாது என்றுதான் சிபிஐ-க்கு இந்த விசாரணையை மாற்றிவிட துடிதுடிப்பு ஆளும் தரப்புக்கு ஏற்பட்டது.
சொன்னபடி செய்தார்
நீதிமன்ற உத்தரவையும் மீறி சிபிஐதான் தங்களுக்கு வேண்டும் என்று அடம்பிடிக்கும் மனோபாவம் நம் தமிழகத்தில்தான் நடக்கும். ஓய்வு பெறும் தேதி நெருங்க நெருங்க சுழன்று வேலை பார்த்தார் பொன்.மாணிக்கவேல். பதவிக்காலம் முடியும் வரை தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக சிலை கடத்தல் விஷயங்களை வெளியே கொண்டு வருவேன் என்றும் உறுதி அளித்தார். சொன்னபடியே இயன்றவரை செய்தும் முடித்தார்.
பிரிவு உபச்சார விழா
நாளை பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற போகிறார். இதற்காக அவருக்கு ரயில்வே காவல்துறை மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு பிரிவு உபச்சார விழாவினை நடத்துகிறது. ஆனால் இவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று எச்.ராஜா உள்பட முக்கியமான கட்சி தலைவர்கள் வலியுறுத்தவும் செய்தார்கள்.
யாருமே விரும்பவில்லை
பொதுமக்களும் இவரது பணி ஓய்வினை விரும்பவில்லை. ஏன் என்றால் இப்படிப்பட்ட ஒரு அதிகாரி தமிழகத்துக்கு கிடைப்பதெல்லாம் இப்போதிருக்கும் காலகட்டத்தில் ரொம்ப அபூர்வம்.. பொன் வைக்கும் இடத்தில் பூ என்பார்கள்.. இனி பொன்மாணிக்கவேல் இருந்த இடத்தில் வரப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.