நைனார்குப்பம் சசிகலா தற்கொலை.. உதயநிதி செய்த டிவிட்.. திமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்!
சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் சசிகலா என்ற பெண்ணின் தற்கொலை பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரின் தற்கொலைக்கு காரணம் திமுக பிரமுகர் ஒருவர் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த திமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இருக்கும் நைனார் குப்பம் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த சசிகலா என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய அளவில் தமிழகத்தை உலுக்கி உள்ளது.
இவர் பாலியல் தொல்லைக்கும் மிரட்டலுக்கும் உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து நான்கு மாதங்களாக இவர் திமுக நிர்வாகி ஒருவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் உள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி தலைமை மருத்துவர் கொரோனாவால் பலி.. மு.க ஸ்டாலின் இரங்கல்!
எப்போது தற்கொலை
கடந்த மாதம் 24 ஆம் தேதி சசிகலா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உடனே போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. தன்னுடைய மக்களின் தற்கொலையில் சந்தேகம் இருக்கிறது என்று அந்த பெண்ணின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். அதன்படி திமுகவை சேர்ந்த தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருசோத்தமன் ஆகியோருக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
என்ன செய்தனர்
இவர்கள் இருவரும் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். பாலியல் தொல்லை கொடுத்ததோடு அந்த பெண்ணை மிரட்டியும் வந்துள்ளனர். சசிகலா குளிக்கும் நேரத்தில் அதை இவர்கள் வீடியோ எடுத்து உள்ளனர். பின் அந்த வீடியோவையே வைத்து சசிகலாவை மிரட்டி தொல்லை கொடுத்து உள்ளனர். இதுதான் சசிகலாவின் தற்கொலைக்கு காரணம் என்கிறார்கள்.
எத்தனை நாட்கள்
மொத்தம் 4 மாதமாக சசிகலாவை இவர்கள் இருவரும் மிரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவரின் தொல்லை தாங்காமல் பெரிய அளவில் சசிகலா மனமுடைந்து கஷ்டப்பட்டுள்ளார். இறுதியில் கடந்த வாரம் இந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்போது போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
அண்ணன் கோரிக்கை
இந்த நிலையில் அந்த பெண்ணின் அண்ணன் தற்போது முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், தனது தங்கையின் உடலை எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். இதனால் தனது தங்கையின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அவர் உட்கார்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கட்சியில் நீக்கம்
தற்போது அந்த திமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். திமுகவை சேர்ந்த தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருசோத்தமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இது தொடர்பாக டிவிட் செய்து இருந்தார். அதில், செங்கல்பட்டு நைனார்குப்பம் சசிகலாவை தற்கொலைக்கு தூண்டியதாக பதியப்பட்ட வழக்கில் இளைஞரணி நிர்வாகி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் தீர விசாரிக்கவேண்டும். அவர் குற்றம் செய்திருந்தால் அவரை கைது செய்யும் நடவடிக்கையை திமுக இளைஞரணி வலியுறுத்தும், என்று குறிப்பிட்டு இருந்தார்.