தண்ணி இல்லைன்னு லீவு விட்டா அவ்வளவுதான்.. தனியார் பள்ளிகளுக்கு செங்கோட்டையன் எச்சரிக்கை
Recommended Video
சென்னை: தண்ணீர்ப் பிரச்சினையை காரணம் காட்டி விடுமுறை அளித்தால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது தண்ணீர் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகளிலும் தண்ணீர் பிரச்சினை தலை தூக்கியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: தண்ணீர் பிரச்சினை காரணமாக தனியார் பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்த அங்கீகாரம் செய்த பின்பே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சில பள்ளிகள் தண்ணீர் பிரச்சினை காரணமாக மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது விதிகளுக்கு எதிரானது. பள்ளிகள் மூடப்படுகிறதா என்பதை கண்காணிக்க கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். தனியார் பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என கூறினால் அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி இல்லாத தனியார் பள்ளிகளின் தடையின்மை சான்று ரத்து செய்யப்படும். அரசு பள்ளிகளில் எவ்வித கட்டணமும் வாங்காமல் அனைத்து வசதிகளையும் செய்து வருகிறோம்.
தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்ய முடியும் என்றார் செங்கோட்டையன்.