பதவிகளுக்காக மோதும் அணிகள்... திமுகவை தேடிப் போகும் தேர்தல் வெற்றி- கவலையில் அதிமுக சீனியர்கள்!
சென்னை: அதிமுகவில் பதவிகளுக்காக அணிகளாக பிரிந்து மோதல்களை விஸ்வரூபமாக்கிக் கொண்டிருப்பது அக்கட்சி சீனியர் தலைவர்களை மிகவும் கவலைப்படவைத்துள்ளது. இதேபோக்கு நீடித்தால் சட்டசபை தேர்தலில் திமுகவின் வெற்றியை நாமே தாரைவார்த்து கொடுத்துவிட்டதாகிவிடும் என கவலைப்படுகின்றனர் அதிமுக சீனியர்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு தொடங்கி அடுத்த ஆட்சி நம்முடையதுதான் என்பதுதான் திமுகவின் முழக்கம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நீடிக்காது; சட்டசபை தேர்தல் வரும் என்றும் திமுக கணக்குப் போட்டது.
ஆனால் திமுகவின் கணக்குகள் எல்லாம் தவிடுபொடியாக்கப்பட்டு எடப்பாடி தலைமையிலான அரசு எந்த சிக்கலுமே இல்லாமல் ஆட்சியையே நிறைவு செய்ய இருக்கிறது. முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசின் பல்வேறு செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. ஆனால் ஒருகுறிப்பிட்ட காலத்தில் எடப்பாடி அரசுக்கு மக்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதிமுகவில் உட்கட்சி பூசல் இல்லை; எல்லாமும் சுமூகமாகப் போகிறது; இதேநிலைமை நீடித்தால் திமுகவின் ஆட்சி கனவு தகர்ந்து போகும் என்பதுதான் முதல்வர் எடப்பாடி தரப்பு நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இந்த நம்பிக்கைக்கு வேட்டு வைக்கும் வகையில்தான் முதல்வர் வேட்பாளர் முழக்கங்கள் எழுப்பப்பட்டுவிட்டன. இதனால் அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் தலைதூக்கிவிட்டன. பொதுச்செயலாளர் யார், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில்தான் இந்த களேபரங்கள்.
கடந்த காலங்களைவிட இந்த கோஷ்டி பூசல் இப்போது புதிய வகையில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இப்போது ஓபிஎஸ் அணியில் அமைச்சர்களும் கை கோர்த்து நிற்கின்றனர். மாவட்ட ரீதியாக, ஜாதிகள் ரீதியாக இந்த பிளவு கூர்மைப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதுவும் சட்டசபை தேர்தல் நெருங்க இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு பகிரங்க விரிசல் அதிமுகவின் எதிர்காலத்தையே சர்வ நாசமாக்கும் என எச்சரிக்கின்றனர் அதிமுக சீனியர்கள்.
இதுபோதாது என்று சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகப் போகிறார் என்கிற விவகாரமும் அதிமுகவுக்குள் பெரும் புயலை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இப்போதே அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் சின்னம்மா புகழ் பாட தொடங்கிவிட்டனர். ஜெயலலிதாவின் சமாதியில் எந்த பன்னீர்செல்வத்தை ஒழித்து கட்டுவேன் என சசிகலா சபதம் போட்டாரோ அந்த ஓபிஎஸ், இப்போது சசிகலாவின் தீவிர விசுவாசியாக வெளிப்பட இருக்கிறார். அதே சசிகலாவால் முதல்வராக்கப்பட்டு அமைச்சர்களாக்கப்பட்டவர்கள் சசிகலா எதிர் முகாம் என்கிற விசித்திர நிலையும் விரைவில் அரங்கேற இருக்கிறது.
இப்படி திக்கு தெரியாத திசைநோக்கி தலைமை இல்லாத அதிமுக பயங்கர தத்தளிப்புடன் போய்க்கொண்டிருக்கிறது. இப்படியே நிலைமை நீடித்தால் அதிமுகவை சமுத்திரத்தில் மூழ்கவைக்காமல் இந்த கோஷ்டி அலைகள் ஓய்ந்து போகாது. இதனால் தேர்தல் கள நிலவரமானது அப்படியே திமுகவுக்கு சாதகமாக திரும்பிக் கொண்டிருக்கிறது. அதிமுக என்றால் கோஷ்டி பூசல்தான்.. ஆட்சியே நிலைக்குமா இல்லையா என தெரியாத திரிசங்கு நிலைமைதான் என்கிற தோற்றத்தை அந்த கட்சித் தலைவர்களே வலிய உருவாக்கிவிட்டனர். இதுதான் அதிமுகவின் மூத்த தலைவர்களை மிகவும் கவலைப்படவும் வைத்திருக்கிறது. எங்கேதான் செல்லப் போகுதோ இந்த பயணம்!