சட்டசபை தேர்தல் முடிவுகளை மட்டும் அல்ல.. தமிழக அரசியலின் எதிர்காலத்தையே தீர்மானிக்க போகும் சசிகலா
சென்னை: பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாவதை முன்வைத்து தமிழக அரசியல் களம் பரபரப்பாக விவாதித்து கொண்டிருக்கிறது.
Recommended Video
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டு சிறைதண்டனை அனுபவித்து வருகிறார். அவரது சிறை தண்டனை முடிந்து ஜனவரி 27-ந் தேதி விடுதலையாகிறார்.
4 ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுகவின் பொதுச்செயலாளராக, அதிமுக சட்டசபை எம்.எல்.ஏக்கள் குழு தலைவராக் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். சசிகலா முதல்வராக பதவி ஏற்க காத்திருந்த போதுதான் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமா சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வந்தது. இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு சிதைந்து போனது. இதனையடுத்து தமது நம்பிக்கைக்குரியவரான எடப்பாடி பழனிசாமியை கூவத்தூர் சொகுசு விடுதியில் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டி முதல்வராக்கினார் சசிகலா. அதிமுகவையும் ஜெயலலிதாவின் ஆட்சியையும் எடப்பாடி பழனிசாமி வசம் கொடுத்துவிட்டு ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குப் போய் 3 முறை ஓங்கி அடித்து சபதம் எடுத்துக் கொண்டு சிறைக்கு போனார் சசிகலா.
சசிகலா ரிட்டர்ன்
இப்போது சசிகலாவின் 4 ஆண்டுகால சிறைவாசம் முடிவடைகிறது. சசிகலா தமிழகத்துக்கு மீண்டும் வருகிறார். சசிகலாவின் அடுத்த ஒவ்வொரு நகர்வும் தமிழக அரசியலில் தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவையாகத்தான் இருக்கும்.
அதிமுக தலைமை கழகம்
அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் அதை ஏற்காமலேயே அக்கட்சியின் தலைமை கழகத்துக்கு சசிகலா செல்ல முயற்சிக்கலாம். அப்படி சசிகலா செல்லும்போதே அதிமுக யார் பக்கம் சாயப் போகிறது என்பது தெரிந்துவிடும்.
சசிகலா நடத்தப் போகும் மந்திராலோசனை
அதிமுக தலைமை கழகத்துக்குப் போகாமலேயே எப்போதும் போல வீட்டில் இருந்து கொண்டே அதிமுகவை மீண்டும் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவர சசிகலா முயற்சிக்கலாம். அப்போது அவரை சந்தித்து பேசப் போகிற அமைச்சர்கள், அதிமுக தலைவர்கள் யார் யார் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாகவும் அதிமுகவின் எதிர்காலத்தை கணிக்கக் கூடியதாகவும் இருக்கும்.
தினகரன், ஈபிஎஸ் மூவ்கள்
சசிகலாவின் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் நிச்சயம் அமமுகவில் இருக்கும் மாஜி அதிமுகவினர் பங்கு இருக்கும். அதனால் தினகரன் தனிமைப்படுத்தப்படவும் வாய்ப்பிருக்கிறது. தேர்தல் நெருங்குவதால் அதிமுகவை ஒருங்கிணைக்க பாஜக படுதீவிரமான முயற்சிகளில் இறங்கும். இதனடிப்படையில் சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி சமாதானமாகவும் வாய்ப்பிருக்கிறது
ஓபிஎஸ் நிலைமை என்னவாகும்?
அப்படி சசிகலாவை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டால் ஓபிஎஸ் நிலைமை பெரும் கேள்விக்குறியாகும்? கடந்த காலங்களைப் போல தர்மயுத்தம் நடத்தக் கூடிய அளவுக்கு மக்கள் செல்வாக்கு, கட்சி செல்வாக்கு இப்போது ஓபிஎஸ்-க்கு இருக்கிறதா? என்பதும் கேள்விக்குறிதான்.
களத்தில் திமுகவுக்கு சவால்
ஓபிஎஸ் இல்லாமல் அதிமுக சசிகலா- எடப்பாடி அணிகள் தேர்தலை எதிர்கொண்டாலே திமுகவுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது. இப்போதைய கணிப்புகளைப் போல திமுகவால் அவ்வளவு எளிதாக தேர்தலில் வென்றுவிட முடியுமா? என்பதும் சந்தேகமாகிவிடும். ஆகையால்தான் சசிகலாவின் விடுதலையும் தமிழகம் வருகையும் தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிகக் கூடியதாகவே இருக்கும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.