குருபூஜை புகைப்பட விவகாரம்.. பிராமணர் சங்கம் மறுப்பு.. ஹெச். ராஜா தகவல்
சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கை கூப்பி வணங்காததால் அவரை பிராமணர் சங்கம் பாராட்டியதாக ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் தாங்கள் அப்படி பாராட்டவில்லை என பிராமணர் சங்கம் தெரிவித்துள்ளதாக ஹெச். ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் அந்த சங்கத்தின் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜையில் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா பங்கேற்றார். தேவர் பூஜையில் அனைவரும் கை கூப்பி வணங்கிய போது ஹெச். ராஜா மட்டும் வணங்காமல் நிற்கும் படம் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இப்படத்தைப் போட்டு, அதன் கீழ், பிராமணர்களை விட தாழ்ந்த வர்ணத்தில் பிறந்த ஒருவரை வாக்கரசியலுக்காக கைக் கூப்பி வணங்காமல் பிராமணர் குலப் பெருமையை காத்த ஶ்ரீமான் ஹெச். ராஜா அவர்களை தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் மனமுவந்து பாராட்டுகிறது - Thamizhnadu Brahmins Assosciation (Thambrass) என்ற பெயரில் ஒரு பாராட்டு தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் இன்று காலை முதல் ஒரு படம் வைரலாகி இருந்தது. இந்த படம் வைரலாக சோசியல் மீடியாவில் பரவியதால் அதை "முத்துராமலிங்க தேவரை கை கூப்பி வணங்காத ஹெச். ராஜா- பிராமணர் சங்கம் பெயரில் பாராட்டு போட்டோ வைரல்" என்ற தலைப்பில் செய்தி நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் செய்தி வெளியிட்டோம்.
இந்த நிலையில் பாஜகவின் ஹெச். ராஜா, தமது ட்விட்டர் பக்கத்தில் பகல் 1:30 PM மணிக்கு தேசியமும் தெய்வீகமும் நமது இருகண்கள் என்ற தலைப்பில் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் தாம் கை கூப்பி வணங்குவதாக இருக்கும் ஒரு படத்தை வெளியிட்டிருந்தார். பின்னர் இரவு 6:24 மணிக்கு மற்றொரு ட்விட்டர் பதிவில், நமது ஒன் இந்தியா தளம் பொய்யான செய்தியை வெளியிட்டிருப்பதாகவும் பிராமணர் சங்கம் இதனை மறுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஹெச். ராஜா வெளியிட்ட பிராமணர் சங்க அறிக்கையில், சமூக வலைதளங்களில் யாரோ ஒருவரோ அல்லது ஒரு இயக்கமோ எங்களது பெயரை முறைகேடாக பயன்படுத்தி ஓர் உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பி வருவதாக அறியப்படுகிறது.
ஏங்க மறுபடியும் மறுபடியும் கலவரம்னு சொல்றீங்க.. எங்கே நடந்தது கலவரம்? திடீரென கொந்தளித்த முருகன்
எங்கள் சங்கம் சார்பில் நாங்கள் உயர்ந்த குலம், தாழ்ந்த குலம் என்று எந்த ஒரு அறிக்கையினையும் எந்த ஊடகங்களிலும் வெளியிடவில்லை என்பதை தெளிவாகவும் உறுதியாகவும் அறிவிக்கின்றோம். எங்கள் சங்க விதிகளின்படி அறிக்கை கொடுப்பதற்க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத் தலைவராகிய எனக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்த ஒரு அறிக்கையிலும் நான் எங்களது விலாசம் இன்றி அறிக்கை வெளியிடுவது வழக்கம் இல்லை.
தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று தமிழக பொதுவாழ்க்கையில் உன்னதமான கோட்பாட்டினை வழங்கிச் சென்றிருக்கின்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களை ஒவ்வொரு பிராமணரும் என்றென்றும் நினைவில் கொண்டு பாராட்டிப் போற்றி வருகின்றோம். எங்கள் சங்கத்தின் கோட்பாடுகளில் உயர்ந்த குலம் தாழ்ந்த குலம் என்ற சிந்தனைக்கே இடமில்லை.
எங்கள் சங்கத்தின் பெயரை முறை தவறி பயன்படுத்தி, பொய்யான அடிப்படையிலும் பாஜக தலைவர் திரு எச். ராஜா அவர்களை சம்மபந்தப்படுத்தியும் வெளியிடப்பட்டுள்ள அந்த மோசடி அறிக்கைக்கும் தமிழ்நாடு பிராமணர் சங்கத்திற்கும் (தாம்ப்ராஸ்) எந்த வித தொடர்பும் இல்லை என்பதை உறுதிபட தெரிவிக்கின்றேன். இது போன்ற முறைக்கேடான, பொய்யான மோசடி அறிக்கையினை வாக்கு வங்கி அரசியலுக்காகவோ அல்லது ஏற்பட்ட அவப்பெயரினை போக்கிக் கொள்ள முயற்சித்தோ, ஓர் அரசியல் தலைவரோ அல்லது அரசியல் இயக்கமோ அல்லது வேறு ஒரு இயக்கமோ வெளியிட்டுள்ளது என்று சந்தேகிக்கின்றோம்.
இந்த மறுப்பு அறிக்கையினைத் தொடர்ந்து இதுபற்றி காவல்துறையில் புகார் அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இங்ஙனம் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பாக, என். நாராயணன், மாநிலத் தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஹெச். ராஜா தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் அறிக்கை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள டிவீட்டின் அடிப்படையில் நாம் முன்னர் வெளியிட்ட செய்தியை நீக்கி இருக்கிறோம்.