ஆளுநராகிறாரா ஹெச். ராஜா? கட்சிப் பதவி கிடைக்காததன் பின்னணி- பரபரப்பு தகவல்கள்!
சென்னை: பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா விரைவில் ஆளுநராக நியமிக்கப்படக் கூடும் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவராக இருந்தவர் ஹெச். ராஜா. தமிழக பாஜகவின் முகங்களில் ஒருவரும்கூட.
தமது தடாலடி பேச்சுகள், ட்விட்டர் பதிவுகளால் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருபவர் ஹெச்.ராஜா. சென்னை உயர்நீதிமன்றம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் ஹெச். ராஜா பேசியது விஸ்வரூபம் எடுத்தது.
பாஜகவுக்கான தூதுவராக ஜெ.வுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் வந்த ஜஸ்வந்த்சிங்
பாஜக புதிய நிர்வாகிகள்
அதேபோல் ஆண்டாள் விவகாரத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவை வீதியில் நடமாட விடலாமா? என ஹெச்.ராஜா கொலைமிரட்டல் விடுத்திருந்ததும் பெரிய சர்ச்சையானது. இந்த நிலையில் பாஜகவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா நேற்று வெளியிட்டார்.
ஹெச். ராஜாவின் தேசிய செயலர் பதவி பறிப்பு
பாஜகவின் தேசிய துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், தேசிய செயலாளர்கள், செய்தித் தொடர்பாளர்கள் என 70க்கும் மேற்பட்டோர் நியமனங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் யாருக்கும் இந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. தேசிய செயலாளர் பதவியில் இருந்த ஹெச்.ராஜாவுக்கு மீண்டும் அந்த பதவி கிடைக்கவில்லை.
ஹெச். ராஜாவுக்கு ஆளுநர் பதவி?
ஆனாலும் புதிய நிர்வாகிகளுக்கு உடனடியா ஹெச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் ஹெச். ராஜா, ஆளுநராக நியமிக்கப்படக் கூடும் என்கிற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், திடீரென தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
கேரளா ஆளுநராகிறாரா?
இதே பாணியில் ஹெச்.ராஜா ஆளுநராக நியமிக்கப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜகவுக்கு சிம்ம சொப்பணமாக இருக்கும் இடதுசாரிகளின் கேரளா அல்லது சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஏதேனும் ஒன்றின் ஆளுநராக ஹெச். ராஜா நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.