ராஜ்யசபா எம்.பி. கனவில் கே.எஸ். அழகிரி, பீட்டர் அல்போன்ஸ், ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: என்னதான் திமுக ராஜ்யசபா எம்.பி. பதவிக்கான வேட்பாளர்களை அறிவித்தாலும் கடைசிநேரத்தில் மாற்றம் வரும்; தங்களுக்கும் சீட் கிடைக்கும் என கனவில் இருக்கின்றனராம் சீனியர் காங்கிரஸ் தலைவர்கள்.
ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவித்த சில நாட்களிலேயே திமுக தமது வேட்பாளர்களை உடனடியாக அறிவித்தது. ராஜ்யசபா எம்.பி. சீட் கேட்டு கூட்டணி கட்சியான காங்கிரஸ் குடைச்சல் கொடுத்துவிடாமல் இருக்கத்தான் இந்த அறிவிப்பை திமுக வெளியிட்டதாம்.
இதனால் அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி டெல்லி தலைமைக்கு புகார் கடிதங்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவையும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து முறையிடவும் உள்ளனர்.
இந்நிலையில்தான் வரும் 7-ந் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராஜ்யசபா தேர்தல் குறித்து காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாம். இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் ராஜ்யசபா சீட்டைப் பெறுவதற்கான லாபிகளில் படு தீவிரமாக உள்ளனராம்.
அதிமுக ஆட்சி ஊழலின் உறைவிடம்... நீதி விசாரணை கோரும் வேல்முருகன்
கே.எஸ். அழகிரியைப் பொறுத்தவரையில் ப. சிதம்பரம் ஆதரவு இல்லாமலேயே எப்படியாவது ராஜ்யசபா சீட் வாங்கி தமது ஆளுமையை நிரூபிக்க முயற்சிக்கிறாரம். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமது டெல்லி லாபிகளை களமிறக்கி ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறாராம்.
பீட்டர் அல்போன்ஸை பொறுத்தவரையில் அவருக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் கேரளா லாபிகளை மலைபோல நம்பி இருக்கிறாராம். திமுகவின் முடிவு நிச்சயம் மாறும்.. இன்னும் நாட்கள் இருக்கிறது. .அதனால் எப்படியும் ராஜ்யசபாவில் கால் வைத்துவிடலாம் என கனவில் இருக்கின்றனராம் இந்த தலைவர்கள்.