திமுகவுடனான கூட்டணிக்கு வேட்டு வைக்கத்தான் வந்தாரா தினேஷ் குண்டுராவ்? கொந்தளிக்கும் காங்.
சென்னை: தமிழகத்தில் திமுகவுடனான கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வகையில் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்த கருத்துகள் காங்கிரஸ் கட்சியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 200-க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதனால் காங்கிரஸ் எதிர்பார்க்கும் 60 இடங்கள் நிச்சயம் கிடைக்கப் போவதில்லை. திமுகவைப் பொறுத்தவரையில் அதிகபட்சம் 25 தொகுதிகள் தரக்கூடும்.
ஆனால் காங்கிரஸ் கட்சியோ 35 தொகுதிகளையாவது பெற்றுவிடுவது என தீர்மானமாக இருக்கிறது. அப்படி கேட்ட தொகுதிகள் கிடைக்காமல் போனால் வேறுவழியே இல்லாமல் புதிய கூட்டணிக்க தாவ வேண்டிய நெருக்கடியில்தான் தமிழக காங்கிரஸ் இருக்கிறது.
டெல்லியின் கண்காணிப்பு வளையத்திற்குள் துரைமுருகன்.. கோப்பை தூசு தட்டி வரும் வருமான வரித்துறை..!
பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் அண்மையில் நியமிக்கப்பட்டார். அவரை அண்மையில் பெங்களூருவில் சென்று தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசித்திருந்தனர். இதனையடுத்து தினேஷ் குண்டுராவ் நேற்று சென்னை வருகை தந்தார்.
திமுக- காங். கூட்டணி ஆட்சி
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு அமையும் என அழுத்தம் திருத்தமாக கூறினார். அப்படியானால் திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்கிறதா? காங்கிரஸ் என பரபரப்பு ஏற்பட்டது. இது திமுக தரப்பை படு டென்ஷனாக்கிவிட்டதாம்.
காங். அதிர்ச்சி
ஏற்கனவே கூட்டணியில் இருப்போமா இல்லையா என அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் சீனியர்களுக்கு தினேஷ் குண்டுராவின் இந்த அசால்ட் பேட்டி கடும் அதிர்ச்சியை கொடுத்தது. பின்னர் தினேஷ் குண்டுராவிடம் நிலைமையை விளக்கினர் சீனியர்கள். இதனையடுத்து தினேஷ் குண்டுராவ் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
தினேஷ் குண்டுராவ் விளக்கம்
அதில், கூட்டணி அரசு பற்றி சொல்லாமல், மு.க. ஸ்டாலினை முதல்வராக்குவோம்; மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைய பாடுபடுவோம் என பாலீஸ் செய்திருந்தார். தமிழகம் வந்த முதல் நாளே தினேஷ் குண்டுராவ் இப்படி கூட்டணிக்குள் கலகத்தை உருவாக்கிவிட்டுப் போனதில் காங். நிர்வாகிகள் இன்னமும் கடுப்பில்தான் உள்ளனராம். வந்த முதல்நாளே கூட்டணிக்கு கொள்ளி வைச்சுட்டுப் போயிட்டாரே எனவும் புலம்பித் தள்ளுகின்றனராம்.