அந்த இடமே கலகலப்பாகி விடும்.. அவ்வளவு எளிமை.. அதுதான் தோழர் கே.வி.. மறைந்தார் கே. வரதராஜன்!
விவசாயிகளின் நெருங்கிய தோழன் கே.வரதராஜன் இன்று காலமானார்
சென்னை: "கே.வரதராஜன் இருந்தால் அந்த இடமே கலகலப்பாகிவிடும்.. அந்த அளவுக்கு எளிமை.. அதே அளவுக்கு திறமை.. இதுதான் தோழர் கே.வி" என்பார்கள் நெருங்கி பழகியவர்கள்!
கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் பொது செயலாளர் கே.வரதராஜன் இன்று காலமானார்.. இவர் அக்கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் இவர் இருந்தவர்.. தற்போது சங்கத்தின் அகில இந்திய துணை தலைவராக பணியாற்றி வந்தவர்.
கரூர் இவரது மகன் வீடு உள்ளது.. அங்குதான் இவர் சில நாட்களாக தங்கியிருந்தார்.. உடம்பு சரியில்லாமல், சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார்.. அவருக்கு வயது 73.. அடிப்படையிலேயே இவர் ஒரு போராளி... விவசாய பிரச்சனை எங்கு நடந்தாலும் சரி, கேவி அங்கு கட்டாயம் ஆஜர் ஆகிவிடுவார்.
நாடு முழுவதும் எங்கு போராட்டம் என்றாலும், கையில் ஒரு பையை எடுத்து கொண்டு கிளம்பி விடுவார்.. அது எந்த மாநில விவசாயிகள் நடத்திய போராட்டமாக இருந்தாலும் சரி, அல்லது தமிழ்நாட்டில் விவசாயிகள் போராட்டினாலும் சரி, கேவி அங்கு வந்துவிட்டால் அந்த போராட்டம் பலம் பெறும்.. அரசுக்கு தரும் அழுத்ததால், அது வெற்றியும் பெறும். இப்படித்தான் ராஜஸ்தானில் விவசாயிகள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினார்கள்.. கேவி அந்த மாநிலத்திலேயே விவசாயிகளுடன் போராட்டம் முடியும்வரை தங்கியிருந்தார்.
இதை தவிர மின்சார பிரச்சனை, கடன் தள்ளுபடி என அனைத்திலுமே இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.
சாலையில் அமர்ந்தார்.. கார்களில் அனுப்பினார்.. கண்ணீரை துடைத்த ராகுல் காந்தி.. நெகிழ்ந்த தொழிலாளர்கள்
ஸ்ரீரங்கத்தில் பிறந்து நெல்லையில் பாளையங்கோட்டையில் பொதுப்பணி துறையில் பணியாற்றினார்.. ஆனால், கட்சிக்காகவே அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமாக தன்னை இணைத்து கொண்டார்.. அகில இந்திய தலைவர், தமிழகத்தில் ஒரு பொறுப்பு மிக்க தலைவர் என்ற பந்தாவெல்லாம் இவரிடம் இருக்காது.. யாராக இருந்தாலும் சரி, வரதராஜனை பார்த்தாலே ஒரு அன்னியான்யம் வந்துவிடும்.. பார்த்த மாத்திரத்திலேயே இவரது பேச்சில் விழுந்து விடுவர்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தலைதூக்கிய சமயம், அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியை இவர் விமர்சித்தததை இன்றுவரை யாராலுமே மறக்க முடியாது.. "தேடித் தேடி பார்க்கிறேன் மூன்றாவது அணி எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என்று திமுக தலைவர் கலைஞர்.... அவர் 3-வது அணி என்று தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணியை தேடி இருந்தால் கிடைக்காது... ஏன் என்றால், அதுதான் இப்போது முதல் அணியாக உள்ளது.. இந்த அணியை ஸ்பெக்ட்ரம் ஊழல் பட்டியலில் தேடினால் கிடைக்காது.
சொத்துக் குவிப்பு வழக்கு பட்டியலில் தேடினால் கிடைக்காது.. கிரானைட் ஊழலில், தாது மணல் ஊழலில் தேடினால் கிடைக்காது... மதுபான கூட்டணியில் தேடினால் கிடைக்காது.. அதனால் இப்படி அணியை தேடுற வேலையை விட்டுவிட்டு தேர்தல் களத்தில் காணாமல் போன அந்தக் கால உண்மையான திமுக தொண்டர்களை கலைஞர் தேடினால் நன்றாக இருக்கும்" என்றார். வரதராஜனின் இந்த கருத்து அப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.. இவ்வளவு துணிச்சலாக கருத்து சொல்லிவிட்டாரே என்று அவரது தைரியத்தை பாராட்டியவர்களே அதிகம்.
எத்தனையோ புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். அத்தனையும் விவசாயமும், விவசாயிகளின் நலனும் சம்பந்தப்பட்டதுதான்.. குறிப்பாக, தலித், ஆதிவாசி, மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதியில் இருந்துவரும் இந்தத் தொழிலாளர்களின் நிலை குறித்துதான் இவர் அதிகமாக கவலைப்பட்டார்.. தவறான கொள்கைகளின் விளைவாக விவசாய தொழிலாளர்களின் வாழ்வியல் குறித்து அப்பட்டமாக எழுத்தில் வெளிச்சம் போட்டு காட்டினார்.
"குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லை.. குந்துவதற்கு ஒழுகாத குடிசையில்லை.. வியாதிக்கு மருந்தில்லை.. குழந்தைகளுக்கு கல்வி இல்லை... என அனைத்து வகைகளிலும் நிராகரிக்கப்பட்ட இவர்களின் பலர் சாதீய ஒடுக்குமுறைக் கொடுமைகளிலும் தாக்கப்பட்டு, நிற்கும் கொடுமை கண்டு கொந்தளிக்காதவர்கள் மனிதர்களே இல்லை" என்ற வாதத்தை அழுத்தமாக தன் நூல்களில் பதித்தவர்!
மாநிலம் முழுவதும் ஏராளமான தலைவர்களை உருவாக்கிய பெருமை கேவி-க்கே போய் சேரும்.. அர்ப்பணிப்பும், இரும்புப் பிடி கொள்கை முடிவும் இறுதி வரை கொண்டவர் கே.வரதராஜன்.. இன்று அவர் நம்மை விட்டு மறைந்தாலும், விவசாயிகளுக்காக ஆற்றிய பணியும், தொண்டும், அர்ப்பணியும் அளவிடமுடியாதது.. மறக்க முடியாதது!!