எப்பதான் நாங்க பிரசாரத்துக்கு போவோம்? புலம்பித் தவிக்கும் திமுக பேச்சாளர்கள்
சென்னை: திமுகவை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்ததில் பெரும்பங்கு வகித்து வரும் பேச்சாளர்கள் தற்போதைய தேர்தல் பிரசாரத்துக்கு இன்னமும் அழைக்கப்படாததால் பெரும் அதிருப்தியில் இருக்கின்றனராம்.
திமுகவில் அண்மைக்காலமாக 2-ம் கட்ட தலைவர்கள், பேச்சாளர்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை என்பது வெளிப்படையான ஒன்று. திமுகவைப் பொறுத்தவரையில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், லோக்சபா எம்.பி.யும் மகளிரணி செயலாளருமான கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது பிரசாரத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கிடைக்கிறது.
கருணாநிதி
தமிழகம் முழுவதும் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த இந்த 3 பேரும் மட்டுமே பிரசாரம் செய்கின்றனர். ஏற்கனவே 2-ம் கட்ட தலைவர்கள் பிரசாரம் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் சம்பிரதாயத்துக்கு பிரசாரம் செய்துவிட்டு ஒதுங்கிக் கொண்டனர்.
உதயநிதி வருகை
பொதுவாக தேர்தல் காலங்கள்தான் பேச்சை மட்டுமே நம்பி இருக்கும் திமுக பேச்சாளர்களுக்கான வாழ்வாதாரம். உதயநிதி ஸ்டாலின் திமுகவுக்குள் காலடி வைத்த பின்னர் இந்த பேச்சாளர்கள் என்பவர்கள் மெல்ல மெல்ல ஓரம்கட்டப்பட்டனர்.
பிரசாரம் களைகட்டியது
ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் கூட்டம், திமுக முப்பெரும் விழா போன்ற நிகழ்ச்சிகளில்தான் இவர்களுக்கு இப்போது வாய்ப்பு. சட்டசபை தேர்தல் பிரசாரம் இப்போது களைகட்டிவிட்டது.
பேச்சாளர்கள் எதிர்காலம்?
ஸ்டாலின் குரல், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் போன்ற நிகழ்ச்சிகளுக்குதான் ஒட்டுமொத்த திமுகவும் முக்கியத்துவம் கொடுக்கிறது. இதனால் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர் திமுகவை மட்டுமே நம்பி இருக்கிற பேச்சாளர்கள்.