திமுகவின் மூத்த முன்னோடி... முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் காலமானார்
சென்னை: திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் தமிழக அமைச்சருமான ரகுமான்கான் காலமானார்.
திமுகவின் சிறுபான்மை முகங்களில் ஒருவராக திகழ்ந்தவர் ரகுமான்கான். தேனி மாவட்டம் கம்பம்தான் ரகுமான்கான் சொந்த ஊர். அவரது சட்டசபை மற்றும் மேடைபேச்சுகளை ரசிப்பதற்கு என தனி பட்டாளமே இருந்தது.
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் 1977, 1980 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றவர் ரகுமான்கான். 1989-ல் சென்னை பூங்காநகர், 1996-ல் ராமநாதபுரம் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றவர்.
சமூக செயற்பாட்டாளர் திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை பால்பாஸ்கர் காலமானார்
5 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த ரகுமான்கான், 1996-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார். திமுகவின் தலைமை செய்தித் தொடர்பாளராக இருந்தார். தமிழக அரசின் சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழுவின் துணை தலைவராக இருமுறை பதவி வகித்தார்.
திமுகவின் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக இருந்த ரகுமான்கான், உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரகுமான்கான் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்
வைகோ இரங்கல்
இதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல்:
முன்னாள் அமைச்சர், என் இனிய நண்பர் ரகுமான்கான் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து தாங்க முடியாத அதிர்ச்சியும், துக்கமும் அடைந்தேன். மாணவர் இயக்கத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மிகச் சிறந்த இலட்சியவாதி ஆவார். தலைசிறந்த பேச்சாளர், மிகச் சிறந்த எழுத்தாளர், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து, குறிப்பாக தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆளும் கட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். சரம் சரமாக கேள்விக் கணைகளைத் தொடுப்பவர்.
ரகுமான்கான், துரைமுருகன், க.சுப்பு ஆகியோர் சட்டமன்றக் கதாநாயகர்களாகத் திகழ்ந்தார்கள். சட்டக் கல்லூரியில் அவர் பயின்ற நாட்களிலிருந்து என் மீது பாசமும் நட்பும் கொண்டிருந்தார். கருணாநிதியை உயிரினும் மேலாகப் போற்றினார். முரசொலியில் அவர் எழுதிய கட்டுரைகளில் அனல் தெறிக்கும்; புனல் பாயும், ஆணித்தரமான கேள்விகள் அடுக்கடுக்காக வரும். பல நாட்டு வரலாறுகளையும், இலக்கியங்களையும் மேற்கோள் காட்டுவார்.
ரகுமான்கான் மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மிகப் பெரிய இழப்பாகும். பாசமும், நேசமும் கொண்டு நான் அவருடன் பழகிய நாட்கள் பசுமையாக மனதில் எழுந்து வாட்டுகின்றன. அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருக்கும், கழகத் தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை மிகுந்த வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.