டமார்.. "கமல் என்னிடம் ஆலோசனையே கேட்பதில்லை".. ஒரே போடாக போட்ட பழ.கருப்பையா.. பரபரப்பு பேட்டி
கமல் குறித்து பழ.கருப்பையா அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்
சென்னை: கட்சியின் அரசியல் ஆலோசகராக இருந்தும் தன்னிடம் கமல்ஹாசன் இதுவரை எந்த ஆலோசனையும் கேட்கவில்லை என்று மநீமய்யத்தின் உள்ள பழ.கருப்பையா பரபரப்பு பேட்டி தந்துள்ளார்.
தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர் பழ.கருப்பையா.. தலைசிறந்த இலக்கியவாதி.. திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ் என இவர் அங்கம் வகிக்காத கட்சி இல்லை.
2011-ம் ஆண்டு அதிமுக சார்பில் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானவர் பழ.கருப்பையா..
அதிருப்தி
பிறகு அந்த கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்... இதற்க பிறகு அப்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். ஆனால், அங்கேயும் அதிருப்தி காரணமாக வெளியேறினார்..
திமுக - அதிமுக
50 ஆண்டுக்கால திராவிட கட்சிகளை ஒழித்துக்கட்டி, ஊழலை அகற்றுவோம் என்று முழக்கத்துடன் திடீரென சில மாதங்களுக்கு முன்பு கமலின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்.. இப்படி திடீர் இணைப்பு பற்றி கேட்டதற்கு, "திமுக, அதிமுக இவங்க 2 பேரிடமும் ஒரேயொரு வித்தியாசம்தான்... காதில் உள்ள கடுக்கனை கழற்றிவிட்டு போவான் அதிமுககாரன் என்றால், அந்த காதையே அறுத்துக் கொண்டு போய்டுவான் திமுககாரன்.. அவ்ளோதான்" என்று ஓபன் அட்டாக் செய்தார்.
அழைப்பு
அதுமட்டுமல்ல, "வாங்க.. ஒன்றுகூடி இந்த தேரை இழுக்கலாம் என்று கமல் என்னை அன்புடன் அழைத்தார்.. நேர்மைக்காக ஒற்றை ஆளாக உறுதியாக நிற்கிறார்.. எனக்கும் வெற்றி தோல்வி பற்றிய கவலையெல்லாம் கிடையாது.. செய்கிற காரியம் நல்லதாக இருக்க வேண்டும்" என்று மநீம இணைந்ததற்கான விளக்கத்தையும் சொல்லி இருந்தார்.
குற்றச்சாட்டு
இந்நிலையில், இப்போது திடீரென ஒரு டிவி சேனலுக்கு பேட்டி தந்துள்ளர் பழ கருப்பையா.. அந்த பேட்டியில் "கட்சியின் அரசியல் ஆலோசகராக இருந்தும் தன்னிடம் கமல்ஹாசன் இதுவரை எந்த ஆலோசனையும் கேட்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் வேறெந்த கட்சிக்கும் செல்லும் எண்ணம் தனக்கில்லை என்றும், குறிப்பாக அதிமுகவுக்கோ, திமுகவுக்கோ மீண்டும் செல்லக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாகவும் பழ கருப்பையா தெரிவித்துள்ளார்.
மநீம
பழ கருப்பையா தந்துள்ள இந்த பேட்டிதான் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது.. ஏற்கனவே மநீமய்யத்தில் இருந்து மகேந்திரன் விலகியபோது ஒரு காரணத்தை சொல்லி இருந்தார்.. அதில், "கமல் கட்சி நடத்தும் விதமும், சிலரின் ஆலோசனைப்படி நடப்பதும் என கட்சியில் ஜனநாயகம் இல்லை.. அவர் கட்சி நடத்தும் நிலைப்பாடு மாறுவதாக தெரியவில்லை... மாறிவிடுவார் என்கின்ற நம்பிக்கையும் இல்லை அவர் தமிழகத்தைச் சீரமைக்கிறாரோ இல்லையே மக்கள் நீதி மய்யத்தைச் சீரமைக்க வேண்டும்" என்று பகிரங்கமாகவே காரணத்தை சொல்லிவிட்டு விலகினார்.
மகேந்திரன்
தன்னுடைய கட்சியில் கமல் யாரையுமே கலந்தாலோசிப்பதில்லை, யாரையுமே முன்னிப்படுத்துவதில்லை, தன் கட்சி, தான் மட்டுமே என்ற ரீதியில் செயல்படுகிறார், வேறு கட்சி தலைவரை சந்திப்பதாக இருந்தாலும், நிர்வாகிகளை உடன் அழைத்து செல்லாமல் தான் மட்டுமே கிளம்பி சென்று சந்திக்கிறார் என்றெல்லாம் அடுத்தடுத்த குமுறல்கள் வெளிவந்தன.
பரபரப்பு பேட்டி
இப்போது மீண்டும் அதே போல ஒரு குமுறலை பழ. கருப்பையா கொட்டி உள்ளார்.. விஜயகாந்த் அன்று கட்சி ஆரம்பித்தபோது, அவருக்கு பக்க பலமாக கூடவே இருந்தவர் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்தான்.. விஜயகாந்தின் எத்தனையோ அரசியல் நகர்வில் அவர்தான் வழிகாட்டியாக இருந்தார்.. அதற்கேற்றபடி, பண்ருட்டி சொல்படியும், ஆலோசனைபடியும்தான் விஜயகாந்த்தும் நடந்து கொண்டார்.. அதனால்தான் 3வது இடத்தை வெகு விரைவில் தேமுதிகவால் எட்டி பிடிக்க முடிந்தது..
தேமுதிக
குடும்ப ஆதிக்கத்தின் காரணமாக அதற்கு பிறகு இந்த விஷயத்தில் நிலைப்பாடு மாறினாலும், பண்ருட்டி இருந்தவரை தேமுதிகவுக்கு மிகுந்த மரியாதை இருந்தது.. அவரை புறக்கணிக்க தொடங்கியதும், அக்கட்சி தேய்ந்து பலமிழக்க தொடங்கியது. இது ஒரு உதாரணம்தான். சீனியர்கள் ஒரு கட்சியில் அங்கம்வகித்தால், அவர்களை சரியாக பயன்படுத்தி கொள்ளவே பலரும் நினைப்பார்கள்..
உள்ளாட்சி தேர்தல்
பழ.கருப்பையாவை பொறுத்தவரை 50 வருடம் திராவிட கட்சியில் ஊறியவர்.. உலக விஷயங்களை கரைத்து குடித்தவர்.. அரசியல் அனுபவம் உள்ள தலைவர்.. மநீமய்யத்துக்கென்று இதுவரை முக்கிய தலைவர்கள் யாருமே இல்லாத நிலையில், கமல் மட்டுமே அப்போதிருந்து இப்போது வரை ஒன்-மேன் ஆர்மியாக திகழ்ந்து வரும் நிலையில், பழ.கருப்பையாவை சரியாக பயன்படுத்தி கொள்ளாதது வேதனையே என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
பரபரப்பு
திமுகவில் முக்கியத்துவம் இல்லாததால்தான் மய்யத்தில் இணைந்துள்ளார் என்பதை கமலும் அறிந்திருப்பார் என்றாலும், உள்ளாட்சி தேர்தல் வரக்கூடிய சூழலில், பழ.கருப்பையாவின் இந்த பேட்டி அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. அதேசமயம், இதுபோன்ற அதிருப்திகளையும் பொருமல்களையும் இனியாவது தன் கட்சியில் இருந்து கமல் வெளிவராமல் பார்த்து கொள்வார் என்றும் நம்பப்படுகிறது.