இனி சின்னம் உதயசூரியன் தான்..எதுக்கு தனிக்கட்சி? திமுகவிலேயே ஐக்கியமாவோம்- நெருக்கடியில் மதிமுக
சென்னை: மதிமுக தொடர்ந்து திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதற்கு அந்த கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
திமுகவைப் பொறுத்தவரையில் லோக்சபா தேர்தலிலேயே கூட்டணி கட்சிகளையும் தமது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தது. பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் தமது கோட்டாவில் ராஜ்யசபா எம்.பி.யாக்க்கியது திமுக.
அதாவது வீடு தனித்தனிதான்.. சமையல் ஒன்னுதான் என்கிற நிலையில் திமுக- மதிமுக நிலைமை உள்ளது. வரும் சட்டசபை தேர்தலிலும் கூட்டணிக் கட்சிகளை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைப்பதில் திமுக படுதீவிரமாக உள்ளது.
விஜயகாந்த் பூரண நலம்.. காலையிலேயே மருத்துவமனையில் வந்த நல்ல செய்தி.. தொண்டர்கள் உற்சாகம்
உதயசூரியன் - இடதுசாரிகள் மறுப்பு
இதற்கு காங்கிரஸ் கட்சி நிச்சயம் உடன்பாடு என்பதை திமுக அறியும். இடதுசாரிகள், விசிக, மதிமுகவுக்கு திமுக தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. இடதுசாரிகளும் கூட சொந்த சின்னத்திலேயே போட்டியிட விரும்புகின்றனராம்.
மதிமுகவின் சின்னம் உதயசூரியன்
மதிமுகவும், விசிகவும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இதுதான் மதிமுகவில் விவாதப் பொருளாகி உள்ளது. இனி கட்சியின் சின்னமே உதயசூரியன் என்றாகிவிட்ட நிலையில் எதுக்கு தனியாக கட்சி நடத்த வேண்டும்? திமுகவில் இணைந்துவிடலாமே என்கிற மனநிலையில் பல மூத்த மதிமுக தலைவர்கள் உள்ளனராம்.
அதிருப்தியில் நிர்வாகிகள்
அதேபோல் மதிமுகவில் சீட் கிடைக்கும்; மதிமுக மூலம் எதிர்காலம் கிடைக்கும் என்றெல்லாம் கனவு கண்டவர்கள் பேசாமல் திமுகவில் இணைந்து மாவட்ட செயலாளருக்கு நெருக்கமாகவே இருந்தால் நமக்கும் தேர்தலில் வாய்ப்புகள் கிடைக்கும்.. மதிமுகவில் இருந்து இனி எந்த பயனுமே இல்லை என்கிற நிலையில் உள்ளனராம்.
வைகோவுக்கு திமுகவில் இடம் இல்லை
பெரும்பாலான மதிமுகவினரின் மனநிலை இப்படியாக இருந்தாலும் திமுக ஒரே ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறது. தாயாக-பிள்ளையாக கட்சி நடதிக்கொள்ளலாமே தவிர ஒரே வீட்டுக்குள் அதாவது திமுகவுக்குள் வைகோவை மீண்டும் சேர்ப்பது என்பது நடக்காது ஒன்று என்பதுதானாம். இதை திமுக தலைமையின் தீர்மானிக்கும் சக்திகள் சுத்தமாகவே விரும்பவில்லையாம்.
பரிதாப மதிமுக
ஏற்கனவே ஸ்டாலினுக்கு வைகோ இடைஞ்சலாக இருப்பார் என்பதால்தான் மதிமுக கட்சியே உருவானது. இப்போது உதயநிதி ஸ்டாலின் திமுகவின் அடுத்த முகமாக முன்னிறுத்தப்படும் நேரத்தில் வைகோவை உள்ளே நுழைப்பது நல்லது அல்ல என்பதில் தீர்மானமாக இருக்கின்றனராம் அந்த தலைமைக்கு நெருக்கமான சக்திகள். ஆகையால் மதிமுக இருக்கும்.. அதன் சின்னமாக உதயசூரியன் இருக்கும். கட்சி தலைவர்கள் இருப்பார்கள்.. தொண்டர்கள் திமுகவில் இருப்பார்கள். இப்படியான நிலைதான் இனியாம்!