களைகட்டிய அதிமுக விருப்ப மனு தாக்கல்.. சீனியர் அமைச்சர்கள் எங்கு போட்டியிட போகிறார்கள் தெரியுமா?
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் இன்று தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல சீனியர் அமைச்சர்களும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜெஜயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அதிமுக தனது விருப்ப மனு வழங்கும் பணியை முறைப்படி துவங்கியுள்து. மார்ச் 5ம் தேதி வரை இந்த பணி தொடரும்.
அதிமுக தலைமையகத்தில் இன்று காலை ஜெயலலிதா உருவ சிலைக்கு எடப்பாடியார் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்டிமென்ட்
இதன்பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இருவரும், முதலாவதாக விருப்ப மனு வழங்கினர். ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, இன்றே சென்டிமென்டாக விருப்ப மனு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் தொகுதி
இதையடுத்து அமைச்சர்கள் மற்றும் சீனியர்கள் விருப்ப மனு வழங்கினர். வரும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார் முதல்வர் பழனிசாமி. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஒபிஎஸ் போட்டியிட உள்ளார். இதற்கான விருப்ப மனுக்களை இன்று அளித்தனர்.
அமைச்சர்கள் எங்கு போட்டி
இதேபோல சீனியர் அமைச்சர்கள் சிலரும் இன்று விருப்பமனு அளித்தனர். அதன்படி, திண்டுக்கலில், திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடவும், கோபியில் - செங்கோட்டையனும், குமாரபாளையத்தில் - தங்கமணியும், தொண்டாமுத்தூரில் -வேலுமணியும் போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.
களை கட்டிய தேர்தல்
பெரிய கட்சிகளில் அதிமுகதான் முதலில் விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளது. எனவே தேர்தல் களைகட்ட ஆரம்பித்துள்ளது. பிற கட்சி தலைவர்களும் தங்கள் தொகுதிகளை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.