முதுபெரும் தமிழறிஞர் இரா. இளங்குமரனார் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்
சென்னை: தமிழகத்தின் மூத்த தமிழறிஞரும், ஆய்வாளருமான இரா.இளங்குமரனார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
சொற்பொழிவாளர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழ் வரலாற்று ஆய்வாளர் எனப் பன்முகம் கொண்டவர் முனைவர் இரா. இளங்குமரனார்.
94 வயதான இரா. இளங்குமரனார், நேற்று இரவு (ஜூலை 25) வயது மூப்பு காரணமாகக் காலமானார்.
முதல்வர் ஸ்டாலின் அதிரடி.. ஒலிம்பிக் சென்றுள்ள 2 வீராங்கனைகளுக்கு அரசு வேலை.. வந்தது உத்தரவு
இரா. இளங்குமரனார்
இரா. இளங்குமரனார் 1927ஆம் ஆண்டு திருநெல்வேலியில் உள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தில் பிறந்தவர். 1946ஆம் ஆண்டு திருநகரில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகத் தனது தமிழ் பணியைத் தொடங்கியவர் இரா. இளங்குமரனார். அதைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். குறிப்பாக, 1963ஆம் ஆண்டு இவர் எழுதிய 'திருக்கு கட்டுரைத் தொகுப்பு' என்ற நூலை அப்போதைய பிரதமர் நேரு வெளியிட்டார்.
விருதுகள்
திருவிக விருது, திருக்குறள் செம்மல் விருது, திருச்சி தமிழ் சங்க விருது, பெரியார் விருது என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இரா. இளங்குமரனார் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இரா. இளங்குமரனார் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ஒரு துவக்கப்பள்ளி ஆசிரியராக தன்னுடைய கல்விப் பணியை துவங்கிய அவர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் முதுமுனைவர் பட்டம் கொடுத்துக் கவுரவிக்கப்பட்டவர்.
செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம்
ஒரு பல்கலைக்கழகம் செய்யக்கூடிய அளவுக்கான பணியை தன்னுடைய தனி மனித உழைப்பால் செய்து முடித்தவர். தமிழ் இலக்கியம், இலக்கணம், ஆய்வு என பல்வேறு துறைகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் 14 தொகுதிகள் நூலை உருவாக்கியவர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரங்கல்
தமிழ் இலக்கணத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட அவர், தமிழ் இலக்கண வரலாறு உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். அவருடைய மறைவு தமிழ் இலக்கிய ஆய்வுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரா. இளங்குமரனாரின் இறுதிச் சடங்கு மதுரை திருநகர் ராமன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.