வம்பாடு பட்டு என்ன பிரயோஜனம்.. வெறும் 8 பேருடன்.. கெத்து காட்டிய குஷ்பு.. "பொங்கலில்" பாஜக தலைகள்!
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை கொள்கைகளை பேசி போராட்டம் நடத்தி என்னபாடுபட்டாலும் நேற்று வந்த நடிகை குஷ்பு 8 பேருடன் போராட்டம் நடத்தி ஓவர்டேக் செய்துவிட்டாரே என்கிற குமுறல்கள் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் எதிரொலித்திருக்கிறது.
தமிழகத்தில் பாஜகவின் முகங்களாக பலரும் இருக்கின்றனர். தமிழகத்தில் தாமரை மலரச் செய்தே தீருவேன் என இடைவிடாமல் போராடிப் பார்த்தவர் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். பாஜகவின் தமிழக இருப்பை ஒவ்வொருநாளும் தக்க வைத்து வந்தார்.
தேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறாரோ... யாரை கேட்கிறார் குஷ்பு
பாஜக தலைவர்கள்
இதற்காகவே அவர் எதிர்கொண்ட எதிர்ப்புகள் ஏராளம். ஆனால் பாஜக மேலிடம் தமிழிசை சவுந்தராஜனின் உழைப்பை உணர்ந்து அவருக்கு ஆளுநர் பதவி கொடுத்தது. இப்போது தமிழிசை சவுந்தரராஜனுக்கு போல தங்களுக்கும் பதவி கிடைக்காதா? என ஏக்கத்தில் பல பாஜக தலைவர்கள் காத்திருக்கின்றனர்.
குறைந்த ஆக்டிவ் அரசியல்
இன்னொரு பக்கம் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நீண்டகாலமாக போராடிக் கொண்டிருக்கும் சிலர் அண்மைக்காலமாக தங்களது செயற்பாடுகளை சற்று குறைத்துக் கொள்ளவும் செய்துவிட்டனர். பாஜகவின் முகங்களாக ஊடகங்களில் பேசியபடியே வலம் வரும் அவர்கள் ஆக்டிவ் பாலிட்டிக்ஸில் இறங்காமல் அமைதி காத்து வந்தனர்.
குஷ்புவின் 8 பேர் போராட்டம்
இந்த இடைவெளியில் உள்ளே வந்த நடிகை குஷ்பு, பேட்டி, போராட்டம் என இறங்கிவிட்டார். அதுவும் 8 பேருடன் போராட்டம் நடத்தப் போய் கைது செய்யப்பட்ட நடிகை குஷ்புதான் நேற்று பேசுபொருள். குஷ்பு ரீ டேக் எடுத்தது, குஷ்பு சொகுசு விடுதியில் சாப்பிட்டது என அத்தனையும் லைவ் காட்சிகளாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.
குமுறலில் பாஜக சீனியர்கள்
இத்தனைக்கும் நடிகைகள் காயத்ரி ரகுராம், கவுதமி போன்றவர்கள் போராட்டமும் நேற்று நடத்தி இருக்கின்றனர். அது எல்லாம் நடிகை குஷ்புவின் 8 பேருடனான போராட்டம் முன்னால் எடுபடாமல் போய்விட்டது. இத்தனை வருஷமாக வம்பாடுபட்டு கட்சியை வளர்த்தா இன்னைக்கு வந்த குஷ்புதான் பாஜகவின் முகமாகிவிட்டாங்களே என்கிற குமுறல் கமலாலயத்தில் எதிரொலித்திருக்கிறதாம்.