திராவிட மண்...பெரியார் மண்... எவராலும் நுழைய முடியாது.. பாஜகவுக்கு எதிராக கே.ஏ. செங்கோட்டையன் ஆவேசம்
சென்னை: திராவிட மண்.. பெரியார் மண்.. தமிழகத்தில் எவராலும் நுழைய முடியாது என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திடீரென டிவிட்டரில் ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். அங்கு நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
எடப்பாடியாரின் "திடீர்" ஆவேசம்.. சசிகலா வந்ததும்.. இருக்கு, சரியான கச்சேரி காத்திருக்கு!
அமித்ஷா எடப்பாடி சந்திப்பு
இச்சந்திப்பின் போது தொகுதி பங்கீடு, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது, முதல்வர் வேட்பாளர் விவகாரம் ஆகியவை குறித்து விவாதித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவுடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை என்றார்.
சசிகலா- எடப்பாடி திட்டவட்டமான முடிவு
அத்துடன் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க 100% வாய்ப்பே இல்லை; சசிகலா வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது; ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே சசிகலாவை நீக்கிவிட்டார். சசிகலா அதிமுகவில் இப்போது இல்லை என திட்டவட்டமாக கூறியிருந்தார்.
ட்விட்டரில் செங்கோட்டையன் ஆவேசம்
இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமது ட்விட்டர் பக்கத்தில் திடீரென பதிவிட்டுள்ள அரசியல் கருத்து பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. செங்கோட்டையனின் பதிவு பாஜகவுக்கு எதிரானதாகவே கருதப்படுகிறது.
திராவிட மண்.. பெரியார் மண்
செங்கோட்டையனின் ட்விட்டர் பதிவு: திராவிட மண்ணில் யாராலும் திராவிட இயக்கத்தை அசைத்து விட முடியாது; இது தந்தை பெரியார் பிறந்த மண். பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட மண்; நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாண்புமிகு அம்மாவால் தீமையகற்றபட்ட மண்; இம்மண்ணிலே எவராலும் நுழைந்து விடமுடியாது. இவ்வாறு செங்கோட்டையன் பதிவிட்டுள்ளார்.