போக்குவரத்து துறை மோசடி.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன்.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு!
போக்குவரத்து துறையில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: போக்குவரத்து துறையில் வேலை பெற்று தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை பெற்று தருவதாக கூறி 2 கோடியே 80 லட்சம் பெற்று மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
தலைமறைவான செந்தில் பாலாஜி தனக்கு முன்ஜாமின் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றபத்திரிக்கையில் செந்தில் பாலாஜியின் பெயர் இல்லாத நிலையில் சட்ட விதிகளை பின்பற்றாமல் அவரை கைது செய்ய காவல்துறையினர் முயற்சிப்பதாக அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகரன் குற்றம் சாட்டியிருந்தார்.
அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் 238 பேர் பணம் கொடுத்து ஏமாந்திருப்பது தெரிய வந்துள்ளதால் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் என விளக்கமளித்தார்.
மேலும், இந்த மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி தான் முக்கிய குற்றவாளி எனபதை உறுதிப்படுத்தும் வகையில் பல ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வாதிட்டார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கு.. 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம்: மத்திய அரசு தகவல்
இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பும் நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்திய நீதிபதி, அதுவரை அவரை கைது செய்ய கூடாது என தெரிவித்து வழக்கு விசாரணையை தள்ளி வைத்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, தேவைப்படும் போது மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும், தினமும் மத்திய குற்றப்பிரிவு அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும், பாஸ்போர்ட்டை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.