சேகர் ரெட்டியின் டைரியில் என் பெயர் இல்லை.. இருந்தால் காட்டுங்கள்.. அமைச்சர் செந்தில் பாலாஜி!
சென்னை: சேகர் ரெட்டியின் டைரியில் என் பெயர் இருப்பதை காட்டினால் நான் பொறுப்பேற்கிறேன் என அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில் மழைக்காலத்தில் தடையில்லா மின் சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உண்மையான மின்மிகை மாநிலம் இல்லை.
மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகம் ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இதுவரை 3.53 லட்சம் புகார்கள் வந்துள்ளன. 3.50 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 56 ஆயிரம் காலிப்பணியிடங்கள் மின் வாரியத்தில் உள்ளன.
எந்த பணியிடங்கள் அவசரம், அவசியம் என ஆய்வு செய்து காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். சேகர் ரெட்டியின் டைரியில் என் பெயர் இருப்பதாக யாரோ ஒருவர் சமூகவலைதளங்களில் கூறியதை சிலர் செய்தியில் வெளியிட்டுள்ளனர். சேகர் ரெட்டி டைரியில் என் பெயர் இல்லை.
ஒரு வேளை என் பெயர் இருப்பதை காட்டினால் நான் பொறுப்பேற்கிறேன். என் தொடர்பான புகார்களை என்னிடமே கேட்டு கொள்ளுங்கள் என்றார் செந்தில் பாலாஜி.