ஒரு காலத்தில் பகையாளிகள்... இன்று நண்பர்கள்... கரூர் அரசியல் கலகல
சென்னை: ஒரு காலத்தில் கீறியும், பாம்புமாக சண்டை போட்டு கரூர் மாவட்டத்தில் அரசியல் செய்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும், எம்.பி. ஜோதிமணியும் இப்போது நண்பர்களாக மாறியுள்ளனர்.
கரூர் மாவட்ட அரசியலை பொறுத்தவரை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செந்தில்பாலாஜி தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்கிறார். ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, மாவட்டத்தில் அதிமுகவை வளர்க்க பேயை போல் சுற்றினார். மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து அதிமுகவை வளர்த்தார்.
அதிமுகவுக்கு எதிராக யார் அரசியல் செய்தாலும் அவர்களை உண்டு இல்லை எனச் செய்துவிடுவார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் தம்பிதுரையும், காங்கிரஸ் சார்பாக ஜோதிமணியும் போட்டியிட்டனர். அப்போது, ஜோதிமணியை கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்த செந்தில்பாலாஜி அவருக்கு பல வழிகளிலும் குடைச்சல் கொடுத்தார்.
இந்நிலையில் காலச்சக்கரம் இவ்வளவு வேகமாக சுழலும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அமமுகவுக்கு சென்று இப்போது திமுகவில் ஐக்கியமாகியுள்ள செந்தில்பாலாஜி, இந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சி வேட்பாளர் என்ற முறையில் ஜோதிமணிக்காக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு அவரை வெற்றிபெற வைத்தார். இவரும் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகிவிட்டார்.
இதையடுத்து கரூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இருவரும் இணைந்தே கலந்துகொள்கின்றனர். பழைய பகையை மறந்து நண்பர்களாக மாறிவிட்டனர். மேலும், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிப்பது, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது என செந்தில்பாலாஜி ஏற்பாடு செய்யும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தனக்காக தேர்தல் பணியாற்றி வெற்றிபெற வைத்தவர் என்ற நன்றிக்கடனுக்காக ஜோதிமணி எம்.பி.யும் கலந்துகொள்கிறார்.