ப்யூர் வெஜ், வெஜ், நான்-வெஜ்.. சென்னை ஐஐடியில் நவீன தீண்டாமை.. பகீர் படம்!
Recommended Video
சென்னை: சென்னை, ஐஐடியில் உணவு விடுதியில், நவீன தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை ஐஐடி உணவகத்தில் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு, தனி வழியும், சைவம் சாப்பிடுவோருக்கு மற்றொரு வழியும் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான புகைப்பட ஆதாரங்கள் இப்போது சமூக வலைதளங்களில் சுற்றி வருகின்றன.
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், தனது முகநூல் பக்கத்திலும் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
சுத்தமான சைவம் (Pure vegetarian) என்று ஒரு பிரிவும், சைவம் சாப்பிடுபவர்கள், அதாவது, வெஜிடேரியன் என்ற மற்றொரு பிரிவும், அசைவம் சாப்பிடுவோர் நான்வெஜிடேரியன் என்று மற்றொரு பிரிவுமாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.
சுத்த சைவம்
அது என்ன சுத்த சைவம் என்ற கேள்வி எழலாம். சுத்த சைவம் என்ற பிரிவில் பரிமாறப்படும் உணவுகளில், வெங்காயம், பூண்டு ஆகியவை கூட சேர்க்கப்படுவதில்லை. பூண்டு, வெங்காயமும் சேர்க்கப்படும் மற்ற சாப்பாடுகள் சைவ உணவு வகைகள் பட்டியலில் வருகின்றன. இதுதவிர அசைவ உணவுகள் பரிமாறப்படுகிறது.
தனி பாத்திரங்கள்
மூன்று வகையான உணவுகளுக்கும் தனித்தனி பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர்களுக்கும் தனித்தனி இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எந்த வழியாக வரவேண்டும், என்பதும் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்காக நோட்டீசும் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
புது நடைமுறை
இதுகுறித்து ஐஐடி மாணவர்கள் சிலரிடம் பேசியபோது, இந்த புகைப்படம் உண்மை தான் என்றும், அது நேற்றுதான் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், பழைய படம் கிடையாது என்றும் தெரிவித்தனர்.
நிர்வாகம் ஓகே
தங்களின் எதிர்ப்பை பதிவு செய்வதற்காக மின்னஞ்சல் மூலம் நிர்வாகத்தில் புகார் அளித்துள்ளனர் சில மாணவர்கள். ஆனால் நிர்வாகத்தின் ஒப்புதலுடன் தான் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதை நவீன தீண்டாமை என்று கண்டித்துள்ளது அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்.